மெட்ராஸ் மாகாணத்தின் பிரிட்டிஷ் அரசு மேற்கண்ட ஏற்பாடுகளை விரிவாக செய்து கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்தத் திட்டத்தால் தங்கள் நிலங்களை பறிகொடுக்கும் வாய்ப்புள்ள விவசாயிகள், பொதுமக்கள் அப்போது என்ன எதிர்வினை ஆற்றினார்கள் என்ற அடிப்படைக் கேள்வி எவருக்கும் எழும்!
அடிமைப்பட்டு கிடந்த தேசத்தில் ஏழை விவசாயிகள் என்ன செய்து விட முடியும்? ஆனாலும், தங்கள் கோரிக்கைகளை மகஜராக (விண்ணப்பம்) எழுதி அரசிடம் அளித்தனர்.
அணை கட்டப்படுவதால் நீரில் மூழ்கும் என கீழ்க்கண்ட கிராமங்கள் குறியிடப்பட்டன. அவை, சாம்பள்ளி, தின்னப்பட்டி, மூலக்காடு, கொளத்தூர், சிங்கிரிப்பட்டி, காவேரிபுரம், கூனாண்டியூர், கோனூர், சோளப்பாடி, கருங்கலூர், நாகமரை, மஞ்சாரஹள்ளி, பத்ரஹள்ளி, கெண்டன ஹள்ளி, சவரியூர் போன்றவை! ஞாயம்பாடி, கோவிந்தப்பாடி, பண்ணவாடி, தண்டா, செட்டியூர், சவேரியார் பாளையம், தார்க்காடு சுந்தராபுரம், போன்ற கிராமங்களும் இதில் அடங்கும்.
பல்வேறு சமயங்களில் பலவித கோரிக்கைகளையும், தங்களின் ஆதார சொத்து, உயிரினும் மேலான நிலம், வாழ்வளிக்கும் மண்ணை இழப்பதற்கு மனமில்லாமல், கண்ணீரோடு தங்கள் குருதியையும் கலந்து எழுதி மாற்று ஏற்பாடுகளுக்கு அரசிடம் விண்ணப்பித்தனர்.
மேலும் அவர்களை பின் தொடர்வோம்.