நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இன்ஜினியர் சுஜி பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தன்னைக் காதலிப்பதாக நடித்து நெருக்கமாக இருந்ததாகவும், அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகக் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த வழக்கில் 2020 ஏப்ரல் 24-ம் தேதி காசி கைது செய்யப்பட்டார். காசியின் மொபைல் போனை போலீஸார் பரிசோதித்து பார்த்தபோது, பல பெண்களை வலையில் வீழ்த்தி நெருக்கமாக இருந்த வீடியோக்கள் சிக்கின. காசியை போலீஸார் விசாரித்தபோது தமிழகம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.
சிறுமி உள்பட 7 பெண்கள் காசி மீது பாலியல் புகார் அளித்திருந்தனர். ஒரு கந்து வட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து காசி வழக்கு கடந்த 2020 மே 27-ம் தேதி சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது ஜிம் பாடியைக் காட்டியும், தன்னை பணக்காரனாகக் காட்டியும் பெண்களிடம் காசி நெருங்கியிருக்கிறான். லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இருந்த வீடியோவில் மட்டுமே 150-க்கும் மேற்பட்ட பெண்களின் 1900 வீடியோக்கள் இருந்துள்ளன.

காசி வலையில் வீழும் பெண்களின் மொபைல் எண்களைத் தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார். அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ், கெளதம் உள்ளிட்டோ கைது செய்யப்பட்டிருந்தனர்.