மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே நேற்று தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு திமுகவினர் கருப்பு உடை அணிந்து சென்றிருந்தனர்.
அதனை பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது திமுக எம்.பி கனிமொழி இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
” ஹிந்துத்துவாவை பாதுகாப்பதாக சொல்லும் ஆளும் கட்சியினருக்கு கருப்பு தெய்வமான காளி நினைவில் இல்லை போல. பெண் சக்தியை பறைசாற்றும் பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்திருக்கிறார். அந்த காளிதான் ஒருவரின் ஈகோ அராஜகம் போன்றவற்றை விரட்டும் தன்மை கொண்டவர்.
அத்தகைய கருப்பு வண்ணத்தை நாங்கள் அணிந்து எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம். ஏனென்றால் அது பெரியாரின் நிறம். சுயமரியாதை, கடைசிவரை போராடும் குணத்தை கற்றுக்கொடுத்தவர் பெரியார். நாங்கள் கடைசிவரை போராடுவோம்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.