வரலாற்றுச் சிறப்புமிக்க, வேலூர் கோட்டை வளாகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் கலை, தொல்லியல், மானுடவியல், புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வகை கலைப்பொருள்கள் இருக்கின்றன. நுழைவாயிலில் 16 அடி உயரமுள்ள டைரனோசொரஸின் கண்ணாடியிழை மாதிரியும், ஒரு சிற்பத் தோட்டமும் உள்ளது. அங்கு கல் சிற்பங்கள், வீரக்கற்கள், கல்வெட்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள், பீரங்கி குண்டுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்துக்கு உள்ளே சென்றால், 8 வெவ்வேறு காட்சியகங்கள் வரவேற்கின்றன. அவை மாணவர்கள், பொது மக்கள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.

இந்த நிலையில்தான் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைகீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில், கோட்டை அருங்காட்சியகத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. அதன்படி, அருங்காட்சியகத்தில் ரூ.13 லட்சத்தில் 1.50 மீட்டர் அகலமும், 2.50 மீட்டர் உயரமும்கொண்ட பேசும் மரபொம்மையும், ரூ.15 லட்சத்தில் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பேசுவதைபோன்ற ஏ.ஐ தொழில்நுட்பத்திலான 1.75 மீட்டர் உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.