ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 27) ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சில் நிலை குலைந்து 16.3 ஓவர்களிலேயே 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய ஆர்சிபி அணி, வெறும் 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
வெற்றி குறித்து ரஜத் படிதார் பேசியவை, “உண்மையைச் சொல்லப்போனால், இந்த வெற்றியின் முழுப் பெருமையும் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் ஆகியோரையே சேரும். அவர்கள் சரியான லெந்தில் பந்துவீசி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்குப் பெரும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக, சுயாஷ் ஸ்டம்புகளை இலக்காகக் கொண்டு துல்லியமாகப் பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது.
ஒவ்வொரு போட்டியிலும் எங்களின் வழக்கமான திட்டங்களைச் சரியாகப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்; அந்த வகையில் நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் ஒரு புதிய தொடக்கமாகவே கருதி அணுகுகிறோம். அணியில் உள்ள பல்வேறு வீரர்கள் வெவ்வேறு தருணங்களில் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்படுவது எங்களுக்குக் கூடுதல் பலம் அளிக்கிறது.

டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஏனெனில், ஒரு தொடரை வெல்வதற்குப் பந்துவீச்சாளர்களால் மட்டுமே வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும். அந்த வகையில் இன்று எங்கள் பந்துவீச்சாளர்கள் காட்டிய நேர்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது,” என ரஜத் படிதார் தெரிவித்தார்.