Tamilnadu
oi-Vignesh Selvaraj
சென்னை: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் ரூ.19 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் இருந்து இயங்கக்கூடிய சுமார் 50 கி.மீ தொலைவு வரையிலான எல்லைகளைக் கொண்ட தனியார் நகரப் பேருந்துகளில், பேருந்து உரிமையாளர்கள் திடீரென கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அதன்படி பயணக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.19 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சேலத்தில் இருந்து அருகில் உள்ள பிற வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தினசரி வேலை, பள்ளி, கல்லூரிக்கு தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கட்டண உயர்வு மட்டுமின்றி, கிராமப்புறங்களில் இருந்து சேலம் நகருக்குத் தனியார் பேருந்துகளில் கொண்டு வரப்படும் காய்கறி கூடைகளுக்கும் வழக்கத்தை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், சிறு வியாபாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தனியார் நகரப் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் கூறியுள்ள பயணிகள், பொதுமக்களின் சுமையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகள் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில் சட்டசபையில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த அனுமதிக்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பயணிகளின் சுமையைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.