இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா? ஸ்மார்ட் லேர்னிங் அவசியமா? என்பது குறித்து பேசிய King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன், ” உண்மையில், பாடத்திட்டம் (Syllabus) என்பது ஒரு தேர்வின் உயிர்நாடி போன்றது. எனவே, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் என்பது மிகவும் முக்கியம்.
ஆனால், அனைத்துப் பகுதிகளையும் ஒரே சீராகப் படிப்பதை விட, அதிக வினாக்கள் கேட்கப்படும் அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றைத் திரும்பத் திரும்பப் படிப்பதே புத்திசாலித்தனம்.

நீங்கள் ஐஏஎஸ் முதல் எந்தத் தேர்வை எழுதினாலும், முதலில் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை ஆழமாக அலசி ஆராய வேண்டும். கேள்விகள் எந்தப் பகுதியிலிருந்து, எப்படி கேட்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதுதான் உங்கள் தயாரிப்பின் முதல் படியாக இருக்க வேண்டும்.
ஒரு தேர்வில் வெற்றி பெற, அனைத்துப் பாடங்களையும் நீங்கள் படிக்க வேண்டியது அவசியம் என்றாலும், அதில் உங்களுக்குப் பிடித்தமான அல்லது எளிதான 3 முதல் 4 முக்கியப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்தது.
உதாரணமாக, யுபிஎஸ்சி தேர்வில் வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் எனப் பல பாடங்கள் இருந்தாலும், உங்களுக்குப் பிடித்தமான பாடங்களில்முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும். மற்ற பாடங்களில் நீங்கள் ஓரளவுக்கு கவனம் செலுத்தி படித்தால் போதுமானது.
ஆனால் எதையும் புறக்கணிக்காமல் படிக்க வேண்டும். உங்களுக்கு ஆங்கிலம் கடினமாக இருந்து, கணிதம் எளிதாக இருந்தால், உங்கள் கவனத்தை கணிதத்தில் அதிகமாக்குங்கள். பிறர் ஒரு பாடத்தைப் படிக்கிறார்கள் என்பதற்காக நீங்களும் அதையே படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று தெரிந்துகொண்டு படிக்க வேண்டும்” என்றார்.