கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு, அவரை தேர்தலில் தோற்கடித்தவர் த.வெ.க-வின் வி.எஸ்.பாபு.
வெற்றிப் பெற்றவுடன், “its over’ என்பதுபோல அவர் காட்டிய கை செய்கைகளும் மீசையை முறுக்கும் ஸ்டைல் போஸ்களும் இணையத்தில் படு வைரலாகின. தி.மு.க-வினர் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கும் வி.எஸ்.பாபுவுக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்குச் சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யபட்டவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வி.எஸ்.பாபுவுக்கு நெருக்கமான கட்சிப் பிரமுகர்கள் சிலர் நம்மிடையே பேசுகையில், “சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ச்சியாகக் கலந்துக்கொண்டவருக்கு, அங்கிருந்த ஏ.சி குளிர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், சமீபகாலமாக நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வந்தார். சரியாக உணவையும் அவரால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
கடந்த செப்.9-ம் தேதி இரவு, உடம்பிலுள்ள சுகரின் அளவு குறைந்து, திடீரென சோர்ந்திருக்கிறார். இதனால், ஆக்சிஜன் அளவும் குறைந்துவிட்டது. உடனடியாக, நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அவரை அழைத்து வந்துவிட்டனர்.