மகாராஷ்டிரா அரசின் ‘லாட்கி பஹின்’ (Ladki Bahin) மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து சுமார் 92 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 2.43 கோடியில் இருந்து 1.5 கோடியாக குறைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயனாளிகளின் விவரங்கள் மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவர்கள் மற்றும் ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்காதவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, e-KYC செயல்முறையை நிறைவு செய்யாதது, வருமானம் மற்றும் தகுதி தொடர்பான முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையால், இதுவரை உதவித் தொகை பெற்று வந்த சுமார் 92 லட்சம் பெண்கள் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

