Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: சுமார் 1.31 கோடி பேர் மகளிர் உரிமை தொகை வாங்கும் நிலையில், இவர்கள் அனைவருக்குமே 2500 மகளிர் உரிமை தொகை தர வேண்டும் என்றால் மாதத்திற்கு 3.275 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இதே நிலையில் ஓராண்டுக்கு என்றால், ₹39,300 கோடி தேவைப்படும். அரசு ஆண்டுக்கு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கோடியே ஒதுக்கி வருகிறது. மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் அனைவருக்கும் கிடைக்க தாமதம் ஆகும் என்றே தெரிகிறது. நிதியமைச்சர் மரியா வில்சன் பேசியதை கவனித்தால் புரியும்
சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறுகையில், “பொருளாதாரம், மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்காக கடன் பெறுவதில் தவறில்லை. அக்கடன்களை ஈடுசெய்யக்கூடிய வளங்களை திரட்டும் முயற்சிகளும் அதனுடன் இணைந்திருந்திருக்க வேண்டும். வருவாய் ஈட்டும் துறைகளில் பெரிய அளவிலான வருவாய் இழப்பை முந்தைய அரசு அனுமதித்ததோடு, அரசின் கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தங்களில் கணிசமான பங்கை நேர்மையற்ற இடைத்தரகர்கள் சுரண்டி செல்லவும் அனுமதித்தது.

தற்போது வருவாய் மற்றும் செலவினத்தில் ஏற்பட்ட கசிவுகளை அடைக்க நாங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் வருவாய் இனத்தில் இதுவரை குறைந்தபட்சம் ரூ.1,500 கோடியை உருவாக்க மாநில அரசால் முடிந்துள்ளது. அரசின் கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் ஏற்படும் வீண் செலவினங்கள் குறைவதன் காரணமாக, செலவினத்திலும் பெரிய அளவில் சேமிப்பு உருவாகும்.
கடந்த 30 ஆண்டுகளாக அமலில் உள்ள பொதுநலத்திட்டங்களில் பெரும்பாலானவற்றை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாடன், அவற்றை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டு உள்ளது. கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கு பல முன்முயற்சிகளை எடுத்து வருவதால், ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் வருவாயை அடைய முடியும்.
பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்நிலை வருவாய் மேம்பாட்டுக்குழுவை அமைத்துள்ளோம். அதுபோல, மக்கள் நலத்திட்டங்கள் மூலமாக வழங்கும் சேவைகளின் திறனை மேம்படுத்தி செலவினத்தை சீரமைப்பது குறித்தும், அரசின் திட்டங்கள் தேவைப்படும் அனைத்து மக்களும் உண்மையிலேயே பயனடைவதை உறுதிசெய்வது குறித்தும் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்க, உயர்நிலை செலவின சீர்திருத்தக்குழுவையும் அமைக்கவுள்ளோம்.
மாநிலத்தின் நிதிநிலை, நிலையில்லாமல் உள்ளது. கடன் சுமையால் நிரம்பியும், குறைந்தபட்ச வருவாயுடனும், கசியும் ஓட்டைகளுடனும் கூடிய கருவூலப்பெட்டி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப்பணி தொடங்கப்பட்டு விட்டது. எனினும், நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதி ஒருங்கிணைப்பு பாதைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும். அரசியல் களத்தில் வெற்றி கண்டதுபோல், இந்த முயற்சியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நிலையான கொள்கைகள் மற்றும் தூய்மையான, திறமையான நல்லாட்சியை வழங்குவதன் மூலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சியை நோக்கிச்செல்ல வேண்டும் என்று அரசு நம்புகிறது” இவ்வாறு நிதியமைச்சர் மரியா வில்சன் பட்ஜெட் உரையில் கூறியிருந்தார்.
அவரது பேச்சை கவனித்தால், நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதி ஒருங்கிணைப்பு பாதைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும் என்பது கருத்தாக உள்ளது. அதேபோல் ரூ.15 ஆயிரம் கோடி கூடுதல் வருவாயை அடைய இலக்கு நிர்ணயித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பழைய திட்டங்களை விரிவுப்படுத்த உள்ளதையும் விளக்கி உள்ளார். எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது, இரண்டு ஆண்டுகள் கழித்தே மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் ஆக கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

