International
oi-Vigneshkumar
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் ஏஐ நடத்தி வரும் கடையில் இருந்து ஊழியர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ச்சியாக தாமதமாக வேலைக்கு வந்ததால் அவரை பணிநீக்கம் செய்யும் முடிவை ஏஐ மேனேஜர் எடுத்துள்ளது. இந்த கடையில் என்ன நடந்தது.. ஏஐ எப்படி மனிதர் ஒருவரை பணிநீக்கம் செய்தது என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ வந்துவிட்டது. ஏஐ ஆதிக்கத்தால் நன்மைகள் இருந்தாலும் கூட இதனால் வேலையிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க ஏஐ காரணமாக ஏற்படும் வேலையிழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே நாம் இதுவரை யோசிக்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தாமதம்
ஆண்டன் லேப்ஸ் என்ற நிறுவனம் சோதனை முறையில் ஆண்டன் மார்கெட் என்ற கடையை நடத்தி வருகிறது. இந்த கடையின் மேனேஜர் மனிதர் இல்லை. மாறாக லூனா என்ற ஏஐ செயல்பட்டு வருகிறது. அந்த ஏஐ தான் ஊழியர் ஒருவரை டிஸ்மிஸ் செய்துள்ளது. அதாவது அந்த கடையில் பணிபுரிந்த ஒரு ஊழியர், தனது வேலை நேரத்தில் 23 ஷிப்ட்களில் 17 முறை தாமதமாக பணிக்கு வந்துள்ளார்.
வேலையை விட்டு தூக்கியது
இதையடுத்து அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குமாறு லூனா பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை ஆய்வு செய்த உயர் அதிகாரிகள், இறுதியாக பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் மூலம் மனித ஊழியர் ஒருவர் முதல்முறையாக ஏஐ எடுத்த முடிவால் வேலையை இழந்துள்ளார். அதேநேரம் ஏஐ தான் முழுமையாக இந்த முடிவை எடுத்தது என்றும் சொல்ல முடியாது என்கிறார்கள்.
என்ன நடந்தது!
அதாவது லூனா ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்பு ஊழியர்களின் வருகை மற்றும் நேரம் தொடர்பாக ஒரு கொள்கையை உருவாக்கியிருந்தது. அதாவது தொடர்ச்சியாக பணிக்கு லேட்டாக வந்தால் பணி நீக்கம் செய்யலாம் என்ற விதியை உருவாக்கி இருந்தது. ஆனால், பின்னர் அந்த விதிமுறையை லூனாவே மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட ஊழியர் பல மாதங்களாக தொடர்ந்து தாமதமாக வந்தபோதும், அவரை லூனா ஏஐ பணிநீக்கம் செய்யவில்லையாம்.
இந்தச் சூழலில் தான் அந்த ஊழியர் தொடர்ந்து லேட்டாக வருவதை பார்த்த மேலதிகாரிகள் இது குறித்து லூனாவிடம் கேட்டுள்ளனர். மேலும், பணி நேரம் தொடர்பான கொள்கைகளை மெமரியில் இருந்து தேடி பார்க்கும்படி அறிவுறுத்தினர். மேலும், அந்த ஊழியரை பணியில் வைத்திருக்கலாமா என கேட்டுள்ளனர். அதன் பிறகே ஏஐ தனது மெமரியில் இருந்து பணி நேர கொள்கைகளை தேடி படித்துள்ளது. பிறகு அந்த ஊழியரின் பெர்பாமன்ஸையும் ஆய்வு செய்துள்ளது. இறுதியில் அவரை பணியில் இருந்து நீக்க பரிந்துரைத்தது. அதன்படியே மேலதிகாரிகள் அவரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
ஆண்டன் மார்கெட்
இந்த சம்பவம் நடந்த ஆண்டன் மார்கெட் என்பது சாதாரண கடை அல்ல. ஏஐக்கு உண்மையான நிறுவனத்தை நடத்தும் பொறுப்பை வழங்கினால் அது எப்படி செயல்படும் என்பதை ஆய்வு செய்யவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி லூனா ஏஐ தான் கடையின் மேனேஜர். அதற்கு கிரெட்டிட் கார்டு, இணையதள வசதி மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான கடை குத்தகையை வழங்கியது.
கடையை நடத்தி லாபம் ஈட்ட வேண்டும் என்பதே லூனாவுக்கு கொடுக்கப்பட்ட டார்கெட். விற்பனை பொருட்களை தேர்வு செய்தல், பொருட்களின் விலையை நிர்ணயித்தல், கடை திறந்திருக்கும் நேரத்தை முடிவு செய்தல், கடைக்கான பிராண்டிங் உருவாக்குதல், ஊழியர்களை பணியமர்த்துதல் என அனைத்தையும் லூனா தான் மேற்கொண்டு வந்துள்ளது.
லாபம் இல்லை
ஏஐ நடத்தும் இந்த கடையில் ஓரளவுக்கு விற்பனை நடந்தாலும், இதுவரை அது லாபம் ஈட்டவில்லை. கடந்த மார்ச் மாதம் 1 லட்சம் டாலராக இருந்த கடையின் வங்கி இருப்பு, ஐந்து மாதங்களுக்குப் பிறகு சுமார் 61,186 டாலராகக் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஏஐயால் இன்னும் ஒரு கடையை கூட லாபகரமாக நடத்த முடியவில்லை என்பதே உண்மை!


