2,000 ஆண்டுகள் பழைமையான திருக்கோலக்கா, சம்பந்தரால் பாடப்பெற்றது. சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பின்னர் நகரத்தார் விரிவாகக் கட்டினர் என்கிறது தலவரலாறு.
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள, தேவாரப் பாடல்பெற்ற 15ஆவது தலம் இது. 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்ட இந்தச் சிறிய கோயிலில் விநாயகர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், சனீஸ்வரர், பைரவர், துர்கை, முருகன், மகாலட்சுமி மற்றும் நவகிரக சந்நிதிகளும் அமைந்துள்ளன. கையில் தாளத்துடன் காட்சி தரும் திருஞான சம்பந்தரின் திருவுருவமும் இங்குள்ளது.
சீர்காழியில் சித்திரைத் திருவிழாவின் இரண்டாம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும். பிறகு திருக்கோலக்காவில் பொற்றாளம் கொடுக்கிற திருவிழாவும் நடைபெறும்.
திருஞானசம்பந்தருக்கு ஈசன் பொற்றாளம் கொடுத்த திருவருளைப் பற்றி சுந்தரர் தனது பதிகத்தில் பாடியுள்ளார். சூரியன், அகத்தியர், கண்வர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் வணங்கிய திருத்தலமிது.

சரியாகப் பேச்சு வராதவர்கள், இனிய குரல் வேண்டும் பாடகர்கள் இங்கு வந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், பேசும் திறனும், நல்ல குரல் வளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இங்குள்ள அம்பிகைக்குத் தேன் அபிஷேகம் செய்து அந்தத் தேனை நாவில் எழுதிக்கொண்டால் பேச்சு வரும் என்பதும் நம்பிக்கை. சங்கீத வித்வான்கள் பலரும் இங்கு வந்து வழிபட்டு சிறந்த குரல் வளத்தைப் பெற்றியிருக் கிறார்களாம். செவித் திறன் குறைந்தவர்களும் இங்கு வந்து வழிபட நல்ல பலன் கிடைக்குமாம்.
சிதம்பரம் செல்லும் அன்பர்கள் தவறாமல் திருக்கோலக்காவும் சென்று வாருங்கள். அங்கே ஈசன் நிகழ்த்திய அற்புதத்தை நினைத்து மகிழ்ந்து அத்தலப் பதிகத்தப் பாடிப் பயன்பெறுங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.