மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் லட்சக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் ஆட்டோ மற்றும் டாக்சியை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு கட்டாயம் மராத்தி மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.
கடந்த 20ம் தேதியில் இருந்து போக்குவரத்து ஆய்வாளர்கள் சாலையில் நேரடியாக களத்தில் இறங்கி ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களின் மராத்தி புலமையை சோதித்து வருகின்றனர்.
மராத்தி தெரியாத டிரைவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனையால் பிறமாநில ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் தங்களது வண்டியை ஓட்டாமல் சாலையோரங்களில் நிறுத்திவைத்துவிட்டு சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். அதேசமயம் மராத்தி கற்றுக்கொள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் மும்பையில் நேற்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இப்போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டி இருக்கிறது. ஆட்டோ டிரைவர்களின் போராட்டம் காரணமாக மும்பை புறநகர் பகுதியில் சாலைகளில் ஆட்டோக்கள் இல்லாமல் போக்குவரத்து நெருக்கடி குறைந்து இருந்தது. பாந்த்ரா, காந்திவலி, கோவண்டி, வகோலா, குர்லா, அந்தேரி மற்றும் சாந்தாகுரூஸ் உட்பட நகரின் பல பகுதிகளில் ஆட்டோ ரிக்ஷாக்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டதால், அலுவலகம் செல்வோர் மற்றும் பிற பயணிகள் ரயில் நிலையங்கள் மற்றும் பணியிடங்களுக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டுநர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் 3 நாட்கள் வரை போராட்டம் தொடரும் என்று எச்சரித்ததுள்ளனர். காந்திவலியில், ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மகாராஷ்டிரா மோட்டார் வாகன விதிகள் சட்டத்திற்கு உட்பட்டது என்றும், மராத்தி தெரிந்திருப்பது கட்டாயம் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேசமயம் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி கற்க கூடுதல் அவகாசம் அளிக்க அரசு தயாராக இருப்பதாகவும், யாருக்கும் அநீதி இழைக்கப்படாது என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். டிரைவர்கள் மராத்தியில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆக இருக்கவேண்டும் என்று கேட்கவில்லை. அவர்கள் மொழியைப் பற்றிய அறிவு மற்றும் மொழியில் பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை” என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
மாநிலத்தின் மராத்தி மொழி கற்க டிரைவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த காலத்தில் தண்டனை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஆட்டோ மற்றும் டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.