அந்த சமயத்தில் தர்மேந்திர பிரதான், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ABVP-யின் தேசியச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். மேலும் பா.ஜ.க-வில் முறைப்படி இணையவிருந்தார்.
அப்போதுதான் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. அதை எதிர்த்து தர்மேந்திர பிரதான், நான் உட்பட மாணவர்களான நாங்கள், தலைமை செயலகத்திற்கு முன்பாக ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். அங்கு சுமார் 1,500 மாணவர்கள் எங்களுடன் இணைந்தனர். போராட்டம் அமைதியாக நடைபெற்றபோதே, காவல்துறை தாக்குதல் நடத்தியது. நாங்கள் மிகவும் பயந்திருந்தோம். அந்த நேரத்தில் தர்மேந்திர பிரதான் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்குச் சில எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன.

நாங்கள் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அரசியல் போட்டிகள் காரணமாகக் கல்லூரி வளாகத் தேர்தல்கள் அவ்வப்போது வன்முறையாக மாறியிருக்கிறது. ஒரு தேர்தலில் தர்மேந்திர பிரதான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்பது தெரிந்ததும், ஜனதா தள ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட நபர்களால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்ததையே நாங்கள் அதிசயமாக கருதினோம்.” என்றார்.