இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, “18 முதல் 52 வயது வரையிலான அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட வேண்டும். இதற்கென தனியாக ‘கர்நாடக மாதவிடாய் விடுமுறை மற்றும் சுகாதார மசோதா-2025’ சட்டமாகக் கொண்டுவரப்படும் வரை, தற்போதுள்ள கொள்கையை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் சட்டம், கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், தோட்டத் தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிரந்தர, ஒப்பந்த மற்றும் வெளிப்பணி பெண் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.” என நீதிபதி குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து தீர்ப்பில், “சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சமம் என்றாலும், அவர்கள் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள். ஆரோக்கியம், கண்ணியம் மற்றும் உடல் சுயாட்சி தொடர்பான விஷயங்களில் இத்தகைய வேறுபாடுகளை அங்கீகரிப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ‘சமத்துவ’ உரிமைக்கு எதிரானது அல்ல. மாறாக அது சமத்துவத்திற்கு ஒரு முழுமையான அர்த்தத்தைத் தருகிறது,” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தொழிற்சங்கங்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குழுவினர் இந்த விடுமுறை கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், இந்த மாதவிடாய் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில முதலாளிகள் சங்கங்கள் மட்டுமன்றி, 15 பெண் தொழில்முறை நிபுணர்களும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் தற்போது வேறொரு நீதிபதியிடம் விசாரணையில் உள்ளன.