அதற்குப் பதிலளித்த பொன்முடி, “இந்தக் கேள்வியே தவறு. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார் என்பது நாடறிந்த உண்மை. புத்தகத்தில் எழுதியிருப்பதால் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
“இது, புத்தகம் இல்லை. கமிஷன் ரிப்போர்ட். மேலும் இதைத் தமிழில் தொகுத்தது (மறைந்த முன்னாள்)தி.மு.க எம்.பி இரா.செழியன். அவர் எப்படி ஸ்டாலினின் பெயர் விடுபட்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார். அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி போன்ற எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மைதானா?” என்று பதில் கேள்வியெழுப்ப,
“எனக்குத் தெரியாது. நான் அதைப் படித்ததில்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்” எனப் பதிலளித்திருந்தார் பொன்முடி.
பொன்முடியின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் விவாதப் பொருளாக மாறியது.
“கருணாநிதியின் மகன் என்பதால்தான் பதவிக்கு வந்தார்” என ஸ்டாலினின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எல்லாம் `மிசா’ என்னும் கேடயம்தான் இவ்வளவு காலம் காத்து வந்தது. அதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட இந்த அம்புக்கு தி.மு.க-வினர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
இது தொடர்பாக, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் (தற்போதைய மாநிலங்களவை எம்.பி) பேசினோம்.
“ `ஷா கமிஷன் அறிக்கையில் பெயர் விடுபட்டிருப்பதைப் பற்றித் தெரியாது’ என்றுதான் பொன்முடி கருத்து தெரிவித்திருந்தார். `ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டது குறித்து தெரியாது’ என்று சொல்லவில்லை. தலைவர் கலைஞர், `நெஞ்சுக்கு நீதி’யிலேயே, தளபதி ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டது குறித்து எழுதியிருக்கிறார்.