
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய ரகசியத் தகவல்கள் அடங்கிய 10 க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்குகள் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், அலுவலகத்தில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே இருந்த சூழலில் இந்த திருட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஆர். நிர்மல்குமார் துறையை ஆய்வு செய்த பின்பு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை அன்று நிர்வாகத்துறையச் சேர்ந்த அதிகாரி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பல்வேறு கணினிகளில் கோப்புகள் சரிவர பதிவாகாததால், பராமரிப்பு பணி செய்யும் தனியார் நிறுவன ஊழியர்களை வரவழைத்து சோதனை செய்தபோது, பல்வேறு கணினிகளில் இருந்து ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நிர்வாகத்துறை பெண் அதிகாரி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் சிசிடிவிகளை கைப்பற்றிய சிந்தாதரிப்பேட்டை போலீசார் இரண்டு சந்தேக நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.