உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு இன்று நடைப்பெற்று வருவதால் மதுரையே விழா கோலம் பூண்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக 4.5 டன் வண்ண மலர்களால் மலர் மாலைகள் தயாரிக்கப்பட்ட நிலையில் நேற்று கோவிலில் உள்ள 12 கோபுரங்களிலும் சாற்றப்பட்டுள்ளது.
ஐஸ்வர்ய சாமந்தி, புஸ்கின் வெள்ளை, சாக்லேட் சாமந்தி, விரிச்சி பூ , ப்ளூ ஆஸ்திரேலியா, ரெட் ஆஸ்திரேலியா, பெங்களூர், ஓசூர், திருச்சி, நிலக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த மலர்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி மும்முறமாக கிழக்கு கோபுரம் எதிரே உள்ள புது மண்டப பகுதியில் நடந்தது.
திருக்கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். கடைசியாக 08.04.2009 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு திருக்கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்கள் மற்றும் மண்டபங்களுக்கும் மராமத்துப் பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது 17 வருடங்கள் கழித்து மீனாட்சியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.

காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்களுக்கான குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.
இன்று முதல் 20.09.2026 வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து வரிசைகளிலும் கட்டணமில்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.