கடலில் மீன்வளத்தை பெருக்க, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடைகாலத்தில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஏப்.15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலான 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதேபோல், கேரளம் உள்ளிட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளில், அரபிக் கடலில் ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதியில் மீன்பிடி தடைக்காலம் நிலவியதால், விசைப்படகு மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்த தடைக்காலத்தில் தங்கள் படகுகள், வலைகளைச் சீரமைக்கும் பணிகள், படகுகள் மற்றும் இயந்திரங்களில் பழுது நீக்குதல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் நாளை (ஜூன் 14) இரவுடன் நிறைவடைகிறது. எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
அதன்படி, சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கரைக்கால், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்,இறால் உள்ளிட்ட கடல் உணவுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய உள்ளதால் கடல் உணவுகளின் விலை கணிசமாக குறையும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

