கோவை மாவட்டம் பேரூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி அங்கம்மாள். இவர்களது மகன் விஷ்வா (13) எட்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, சுண்டாக்காமுத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்வதற்குத் தயாராகி வந்தார்.
விஷ்வாவிற்கு மீன் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் தன்னுடைய வீட்டில் மீன் தொட்டிகளில் மீன்களை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அசுத்தமாக இருந்த மீன் தொட்டியைச் சுத்தம் செய்துள்ளார்.
இதற்கு முன்பாக மீன் தொட்டியின் சுவிட்சை அணைக்க அவர் மறந்து விட்டதாகத் தெரிகிறது. மீன் தொட்டியைச் சுத்தம் செய்ய தொட்டிக்குள் இருந்த மீன்களை வெளியே எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விஷ்வா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு அலறியபடி கீழே விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் வந்து பார்த்தபோது, விஷ்வா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.