தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள “மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தை ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோருடன் இணைந்து சமந்தா தனது ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) பேனரின் கீழ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நடிகை சமந்தா தனியார்செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
அந்தப் பேட்டியில், “ஒரு சாதாரண பெண்ணான எனக்கு இவ்வளவு பெரிய ஸ்டார்டம் கிடைத்ததும், ரசிகர்கள் திரையில் என் பெயரைப் பார்த்துக் கத்துவதும் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சிதான் என்னை அடுத்தடுத்து ஓட வைத்தது.
ஒருகட்டத்தில் சினிமா எனக்கு ஒரு போதையாகவே மாறிப்போனது. மேலும், ஒரு வருடத்தில் அடுத்தடுத்து நடித்த 5 படங்களும் ஹிட்டானதால், தன்னை ‘அதிர்ஷ்டக் கால்’ (Golden leg) கொண்டவர் எனப் பாராட்டினர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் தன் திறமையை வளர்த்துக் கொள்வதைப் பற்றி யோசிக்காமல், வெறும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளோடு மட்டுமே நான் திருப்தி அடைந்தேன்.
எனது திரை ஓட்டத்தில் நான் பெருமைப்பட முடியாத பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன். 2012-ம் ஆண்டிலேயே, எனது திரைப்பயணம் தொடங்கிய 15 நாட்களிலேயே உடல்நலக் குறைவால் படுக்கையில் விழ நேரிட்டது.