சமீபத்தில் புனேயில் ஷியா அகர்வால் என்ற பெண் தனது வருங்கால கணவனை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொலை செய்தார். தற்போது மும்பையில் மேலும் ஒரு பெண் தனது காதலனைக் கொலை செய்து உடலை வீட்டின் குளியல் அறையில் அடைத்துவைத்துவிட்டு சென்றுள்ளார்.
மும்பை அருகில் உள்ள கல்யான் நீல்காந்த் சொசைட்டியில் நேகா என்ற பெண் தனது காதலனுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். ஆனால் அவர்கள் தங்கி இருந்த வீடு கடந்த சில நாள்களாகப் பூட்டப்பட்டு இருந்தது.
அதோடு அந்த வீட்டிலிருந்து கெட்ட வாசனை வந்து கொண்டிருந்தது. இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இந்நிலையில் நேகா தங்கி இருந்த வீட்டு உரிமையாளருக்கு இதுதொடர்பாக வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அதில் உங்கள் வீட்டு குளியல் அறையில் ஒருவரின் இறந்த உடல் இருப்பதாகவும், அதில் தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
உடனே இது குறித்து வீட்டு உரிமையாளர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து வந்து அந்த வீட்டின் கதவைத் திறந்தனர். வீட்டின் உள்ளே குளியல் அறையில் சாக்கு மூட்டையில் உடல் கட்டப்பட்டு அது டிரம் ஒன்றில் வைக்கப்பட்டு அதன் மீது தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. உடல் உறுப்புகள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது. அதனை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் விரைவில் அழுக வேண்டும் என்று கருதி தொடர்ந்து தண்ணீர் விழும்படி செய்து இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையே என்ன பிரச்னையில் இக்கொலை நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்த பெண் கொல்கத்தாவிற்குத் தப்பிச்சென்றுவிட்டார். அவரைக் கைது செய்ய தனிப்படை போலீஸார் கொல்கத்தாவிற்கு விரைந்துள்ளனர்.