மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு வருகிறது. தற்போது இப்பணியில் ரிலையன்ஸ் நிறுவனமும் இறங்கி இருக்கிறது. மும்பை அந்தேரி ஜுகு கல்லி பகுதியில் 101 ஏக்கரில் குடிசைகள் அடங்கிய நிலப்பகுதியை மேம்படுத்தும் பில்டரை தேர்வு செய்வதற்காக குடிசை மறுசீரமைப்பு ஆணையம் டெண்டர் விட்டு இருந்தது.
இதில் சாபூர்ஜி அண்ட் பாலன்ஜி, ரிலையன்ஸ், ஜெ.எஸ்.டபிள்யூ போன்ற நிறுவனங்கள் டெண்டர் கொடுத்து இருந்தன. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 4IR ரியாலிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் மகாதேவ் ரியல்டர் நிறுவனத்துடன் இணைந்து டெண்டர் கொடுத்து இருந்தது.

டெண்டர்கள் திறக்கப்பட்டதில் ரிலையன்ஸ் தலைமையிலான கூட்டு நிறுவனம் மாநில அரசின் குடிசை மறுசீரமைப்பு ஆணையத்திற்கு கொடுக்கும் நிதியின் அளவு அதிகமாக இருந்தது.
அதன் அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பணி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது. வழக்கமாக அரசு நிலத்தில் இருக்கும் குடிசைகளை மேம்படுத்தும் போது நில மதிப்பில் 25 சதவிகிதத்தை பில்டர்கள் அரசுக்கு வரியாக கொடுப்பார்கள். ஆனால் இதில் ரிலையன்ஸ் நிறுவனம் 35 சதவிகிதம் கொடுப்பதாக தெரிவித்து இருந்தது. எனவேதான் இப்பணி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் குடிசைவாசிகளுக்கு நிலுவையில் உள்ள வாடகை தொகையான ரூ.180 கோடியை உடனே கொடுக்கவேண்டும். அதோடு அடுத்த இரண்டு ஆண்டுக்கு தேவையான வாடகை ரூ.750 கோடியை முன்பணமாக கொடுக்கவேண்டும். ஜூஹு மறுசீரமைப்பு திட்டம், மும்பையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் மிகப்பெரியதாகும்.