தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறி, த.வெ.க-வுடன் இணைந்திருக்கிறது.
அதையடுத்து அ.தி.மு.க-வில் ஒரு தரப்பு த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மற்றொரு தரப்பு கொடுக்கக் கூடாது என்றும் கூறியதால் அங்கு உட்கட்சிப் பூசல் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அ.தி.மு.க-வின் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்று காலை அங்கு வந்த புதுச்சேரி அ.தி.மு.க அமைப்பாளர் எம்.எல்.ஏ அன்பழகனிடம், `தமிழகத்தின் எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரிக்கு வந்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “தமிழகத்தில் அரசியல் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து, `அனைத்து எம்.எல்.ஏ-க்களும் வரவில்லையே… எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தானே வந்திருக்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, `நாங்கள் அனைவருமே பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள்தான். 70% எம்.எல்.ஏ-க்கள் வந்திருக்கிறார்கள். மீதமிருப்பவர்களும் இனிமேல் வருவார்கள்.