ஆண்டிப்பட்டி தொகுதி ‘மூன்று முன்னாள் முதல்வர்கள் களம் கண்ட தொகுதி’ என பெயர் பெற்ற நிலையில் தற்போது மூன்று முறை அண்ணன், தம்பி போட்டியிட்ட தொகுதி என புதிய பெயர் கிடைத்திருக்கிறது.
திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ மகராஜனும், அதிமுக சார்பில் அவருடைய தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். 2019 இடைத் தேர்தலின் போது முதன் முதலாக மோதி கொண்ட அண்ணன், தம்பி போட்டியில் மகராஜன் வெற்றி பெற்றார்.
அதை தொடர்ந்து வந்த 2021 தேர்தலிலும் மீண்டும் அண்ணன், தம்பியே போட்டியிட்டு மீண்டும் மகராஜனே வெற்றி பெற்றார்.
’அ.தி.மு.க, தி.மு.க போட்டியை தாண்டி அண்ணனுக்கும் தம்பிக்குமான போட்டியாகவே இருக்கிறது, அதனால் மீண்டும் லோகிராஜனுக்கு சீட் கொடுக்க கூடாது’ என அ.தி.மு.க -வினர் போர்கொடி உயர்த்த தொடங்கினார்.

மறுபுறம் 7 வருடங்கள் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்த மகாராஜன் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை, குறிப்பாக வருஷநாடு பகுதிகளில் சாலை அமைப்பதற்கு வனத்துறை முட்டுக்கட்டை போட்டு வருவதால் அந்த பகுதி மக்கள் தி.மு.க மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
கூடுதலாக தங்கதமிழ்செல்வனுடன், மகாராஜனுக்கு ஏற்பட்ட மோதலால் அவருக்கு எதிராக தி.மு.க.வினரும் உட்கட்சி பூசலில் ஈடுபட்டதால் இந்த முறை அதிமுக வென்று விட வாய்ப்புள்ளது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் மீண்டும் லோகிராஜனுக்கே சீட் கொடுத்தது அ.தி.மு.க -விற்குள் சலசலப்பை உருவாக்கியது.
ஆனாலும் அ.தி.மு.க -வினர் கடுமையாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். ’இரண்டு முறை அண்ணனுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என லோகிராஜன் வெளிப்படையாகவே மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்தார்.

வாக்கு எண்ணிக்கையின் போது மதியம் வரை லீடிங்கில் இருந்த லோகிராஜன் அதற்கு பிறகு இறங்குமுகம் காணத் தொடங்கினார். தொடர்ந்து லீடிங்கில் வந்த மகாராஜன் இறுதியாக 8,944 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்
தவெக சார்பில் போட்டியிட்ட பாண்டி என்பவர் மீது நிறைய புகார்கள் வரிசை கட்டியதால் தொகுதி மக்கள் தி.மு.க, அ.தி.மு.க -வினருக்கே வாக்களித்தனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் வீசிய த.வெ.க அலை ஆண்டிபட்டி தொகுதியில் வலுவிழந்தது.