Sports
oi-Shyamsundar I
நியூயார்க்: ஃபிபா உலகக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அர்ஜென்டினா அடைந்த தோல்வி, வெறும் ஆட்டத்தின் தோல்வி மட்டுமல்ல.. அது அந்த அணியின் நட்சத்திர மிட்பீல்டர் என்சோ பெர்னாண்டஸின் மோசமான ஆட்டத்திற்கு கிடைத்த மரண அடி.
நேற்று மெட்லைஃப் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் அர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் மீது கடும் கோபத்தில் இருந்தது.
போட்டியின் மிக முக்கியமான 93-வது நிமிடத்தில் அவர் வாங்கிய Red Card, அர்ஜென்டினாவை 10 வீரர்களுடன் விளையாடும் சூழலுக்கு தள்ளியது.

இறுதியில் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயினிடம் தாரைவார்க்க முக்கிய காரணமாக அமைந்தது.
இறுதிப்போட்டியில் அரங்கேறிய அநாகரிகம்
ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரியுடன் ஏற்பட்ட மோதலின் போது, தனக்கு சாதகமாக ஃபவுல் வழங்கப்படவில்லை என்ற ஆத்திரத்தில் நடுவர் ஸ்லாவ்கோ வின்சிக்கிடம் என்சோ பெர்னாண்டஸ் மிகவும் அநாகரிகமான முறையில் வாக்குவாதம் செய்தார். இதற்காக அவருக்கு முதல் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஒருமுறை எச்சரிக்கப்பட்ட பிறகும் என்சோ தனது ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த 93-வது நிமிடத்தில், ஸ்பெயினின் பாவ் குபார்சியை மிக மோசமான முறையில் பாய்ந்து ஃபவுல் செய்தார்.
இதில் குபார்சி காற்றில் பறந்து கீழே விழுந்தார். இந்த ஆட்டத்தை சற்றும் ஏற்றுக்கொள்ளாத நடுவர், என்சோவுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டையை நீட்டி, உடனடியாக சிவப்பு அட்டை வழங்கி மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
தொடரும் மோசமான நடத்தை!
என்சோ பெர்னாண்டஸ் மைதானத்தில் இப்படி மோசமாக நடந்துகொள்வது இது முதல் முறையல்ல. அவரது இந்த முரட்டுத்தனமான மற்றும் ஒழுங்கீனமான நடத்தை கடந்த சில மாதங்களாகவே கிளப் போட்டிகளிலும் வெளிப்பட்டு வந்துள்ளது.
செல்சியா கிளப் அணிக்காக விளையாடும் போதும், பிரீமியர் லீக் தொடரில் இதேபோன்று நடுவர்களிடம் வம்பு இழுப்பது, எதிரணி வீரர்களை தேவையின்றி வம்புக்கு இழுப்பது என பலமுறை மஞ்சள் அட்டைகளை குவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடந்த பிரீமியர் லீக் போட்டிகளில் அடுத்தடுத்து மஞ்சள் அட்டைகளையும், ஆர்சனல் மற்றும் சண்டர்லேண்ட் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிவப்பு அட்டை வாங்கிய வரலாறும் இவருக்கு உண்டு.
மைதானத்தில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், ஆக்ரோஷமாக எதிரணி வீரர்களை தாக்குவதை அவர் வழக்கமாகவே வைத்திருந்தார். கால்பந்து விமர்சகர்கள் பலரும், என்சோவுக்கு இந்த ரெட் கார்ட் எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது, இப்போது உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய விலையாக அமைந்துவிட்டது என்று விமர்சித்து வருகின்றனர்.
வரலாற்றுப் பக்கங்களில் அர்ஜென்டினாவின் கரும்புள்ளி
உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறும் 6வது வீரர் என்ற மோசமான சாதனையை என்சோ பெர்னாண்டஸ் படைத்துள்ளார். மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டிகளில் அதிக சிவப்பு அட்டைகளை வாங்கிய மோசமான சாதனையையும் அர்ஜென்டினா அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 1990-ல் பெட்ரோ மோன்சோன், குஸ்டாவோ டெசோட்டி ஆகிய அர்ஜென்டினா வீரர்கள் இறுதிப்போட்டியில் ரெட் கார்ட் வாங்கியிருந்தனர்.
என்சோவின் இந்த முட்டாள்தனமான செயலால், கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை கனவு கண்ணீரில் முடிந்தது. திறமை இருந்தும், ஒழுக்கமும் நிதானமும் இல்லை என்றால் எவ்வளவு பெரிய அணியும் சரிவைச் சந்திக்கும் என்பதற்கு என்சோ பெர்னாண்டஸின் இந்த ரெட் கார்ட் சம்பவம் ஒரு உலகளாவிய பாடம்!