International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஈரான் 7 நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார். ஈரானின் நிலைப்பாடு தெளிவாகவும், எந்தவித குழப்பமும் இல்லாமலும் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா ஈரான் இடையேயான போர் கடந்த பல மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தாக்குதல் குறைந்துவிட்ட போதிலும், அங்கு பதற்றம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வளைகுடாவில் நிலவும் இந்த பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் உயர்கிறது. இதனால் சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஈரான் 7 நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார். தனது நிலைப்பாட்டையும் ஈரான் திட்டவட்டமாக அமெரிக்காவிடம் கூறியுள்ளதாக மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரெசாயி தனது எக்ஸ் பதிவில், “அமெரிக்க அரசுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் தொடங்குவதற்கான 7 நிபந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வர விரும்பினால், ஈரானின் உரிமைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கா தானே உருவாக்கிக் கொண்ட சிக்கலில் இருந்து வெளியேறவும், அதில் மேலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் விரும்பினால், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றார். எனினும், அந்த 7 நிபந்தனைகள் என்ன என்பதை அவர் தனது பதிவில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில் ரெசாயியின் இந்த கருத்தை கூறியிருக்கிறார். இதற்கிடையே பிப்ரவரியில் ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை போர்க்குற்றம் என ஐநா உண்மை கண்டறியும் குழு தெரிவித்திருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மினாப் பகுதியில் உள்ள ஷஜரே தய்யெபே தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் சுமார் 120 பேர் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பள்ளி தெளிவாக அடையாளம் காணக்கூடிய கட்டிடம் என்றும் அது ராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஐநா குழு தெரிவித்துள்ளது. அதையும் தாண்டி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ஏற்க முடியாது எனவும் இது சர்வதேச சட்டத்தின் கீழ் அது போர்க்குற்றமாக கருதப்படலாம் என்றும் குழு கூறியுள்ளது.
அதேநேரம் ஐநாவின் குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது. தற்போதைய மோதலில் ஈரான் மட்டுமே போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளும் ராணுவமும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

