போர்ச் சூழலில் இது ஏன் விவாதம் ஆகிறது?
அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் மோதல் காரணமாக, முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இது போன்ற போர்ச் சூழலில், தங்கம் ஒரு “பாதுகாப்பான புகலிடமாக” கருதப்படுகிறது. மக்கள் தங்கத்தை வாங்க முற்படுவதால், அதன் விலை மற்றும் இறக்குமதி அதிகரிக்கிறது. இதனால் டாலர் வெளியேற்றமும் கூடுகிறது.
எனவே, இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு அழுத்தங்களை எதிர்கொள்கிறது: ஒன்று, அதிக விலையில் எண்ணெய் இறக்குமதி; மற்றொன்று, அதிக விலையில் தங்க இறக்குமதி. ஒவ்வொரு முறை தங்கம் வாங்கப்படும்போதும், இறக்குமதியாளர் சந்தையிலிருந்து டாலரை வாங்குகிறார். இது டாலருக்கான தேவையைக் கூட்டி, ரூபாயை மேலும் பலவீனப்படுத்துகிறது. மாறாக, தங்கம் வாங்குவதை நிறுத்தினால், டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மற்றும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மீதான அழுத்தம் குறையும். “இது ஒரு தற்காப்பு பொருளாதார உத்தி, பீதியடைய வேண்டிய அவசியமில்லை,” என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

நிதி ஆலோசகர்கள், `நகைகள் அல்லது தங்கக் கட்டிகளாக வாங்குவதற்குப் பதிலாக, நிதி சார்ந்த தங்க முதலீட்டுத் திட்டங்களுக்கு மாறுமாறு பரிந்துரைக்கிறார்கள். SIP-கள் மற்றும் கோல்டு ETF-கள் (Gold ETFs) மூலம் முதலீடு செய்வதன் மூலம், பணத்தை இந்திய நிதி அமைப்புக்குள்ளேயே வைத்திருக்க முடியும். இது டாலர் வெளியேற்றத்தை ஏற்படுத்தாமல் மூலதனத்தை உற்பத்திக்கு பயன்படுத்த உதவும் என்கிறார்கள்.
மற்ற துறைகளில் தாக்கம்
பிரதமர் மோடியின் வேண்டுகோள் தங்கம் மட்டுமல்லாது, பொருளாதரத்தின் மற்ற முக்கிய துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்கும்படி கூறியதால், விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை பங்குகள் மந்தமடைந்துள்ளன. இதேபோல், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும்படி விடுத்த கோரிக்கை பெட்ரோலியத் துறை நிறுவனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் உரங்களின் இறக்குமதியைக் குறைக்கும் கொள்கை வழிகாட்டுதல்களால், அத்துறைகளிலும் வளர்ச்சி வேகம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
INPUT : NDTV