International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாள பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அந்நாட்டு அரசு அவசரமாக புதைக்க தொடங்கியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், நேபாள அரசு இப்படி செய்து வருவது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆக.26ம் தேதி காலை நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பு படையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். இதுவரை 675 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இந்த உடல்களின் உறவினர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களிடம் உடல்களை ஒப்படைக்க வேண்டும். ஆனால், அதுவரை உடல்கள் பாதுகாத்து வைத்திருக்க போதுமான குளிர்சாதன வசதி கொண்ட பிணவறைகள் இல்லை. சில இடங்களில் 10-20 உடல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், இந்திய-நேபாள எல்லையில் உள்ள சித்வான் மாவட்டத்தில் மட்டும் சுமார் 233 உடல்கள் கிடைத்திருக்கின்றன. இவ்வளவு உடல்களை எங்கு வைத்து பாதுகாப்பது? வைக்க இடம் இல்லை. எனவே அவை அழுக தொடங்கியிருக்கின்றன.
இப்படியே போனால், தொற்று நோய்கள் பர தொடங்கிவிடும் என்று யோசித்த நேபாள அரசு.. உடனடியாக அனைத்து உடல்களையும் புதைக்க ஏற்பாடு செய்திருக்கிறது. புதைப்பதற்கு முன்னர், அந்த உடல்களிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டிக்கின்றன. டிஎன்ஏ மாதிரிகளின் அடிப்படையில் ஒவ்வொரு உடல்களுக்கும் ஆதார் நம்பரை போல.. தனித்தனியான எண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு உடல்களும் பிரத்யேக பைகளில் அடைக்கப்பட்டு, 1.5 ஆழம் கொண்ட குழிகளில், ஒவ்வொரு குழிக்கும் 40 செ.மீ இடைவெளி விட்டு புதைக்கப்பட்டிருக்கின்றன.
உடல்கள் புதைக்கப்பட்ட பகுதியில், பிரத்யேக எண் கொண்ட சைன் போர்டு வைக்கப்படும். புதைக்கப்படும் நிகழ்வு முழுமையாக வீடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டு அது ஆவணப்படுத்தப்பட்டு அந்த இடம் ஜியோ-டேக் செய்யப்படுகிறது. மேலும் அடையாளம் தெரியாத உடல்களின் விவரங்களை நேபாள போலீசார் QR code மூலம் தங்கள் வெப்சைட்டில் பகிர்ந்திருக்கின்றனர்.
இது முதல் பிராசசஸ். இப்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேட தொடங்குவார்கள். இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தங்கள் டிஎன்ஏ சாம்பிளை கொடுக்க வேண்டும். இந்த சாம்பிள்.. உயிரிழந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்களுடன் ஒத்து போனால்.. உடல் புதைக்கப்பட்ட இடத்தை எளிதாக அடையாளம் கண்டுக்கொள்ளலாம். பின்னர் அந்த உடலை தோண்டி எடுத்து.. இறுதி சடங்கு செய்துக்கொள்ளலாம்.
இது தலையை சுற்றி மூக்கை தொடும் வேலையாக இருந்தாலும்.. உடல்களை பாதுகாத்து வைப்பதற்கு ஆகும் செலவை விட குறைவான செலவுதான் ஆகும். எனவேதான் அரசு இந்த நடமுறையை பின்பற்றுகிறது.