`யாரும் திருடிட கூடாது' கிரேன் மூலம் ஸ்கார்பியோ காரை வீட்டுமாடியில் வைத்துவிட்டு வெளிநாடு சென்ற நபர்

Spread the love

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுகாராம் யாதவ் என்பவருக்கு மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று சொந்தமாக இருக்கிறது. அந்த காரை அவர் தனது வீட்டிற்கு வெளியில் நிறுத்துவது வழக்கம். இதனிடையே அவர் ஒரு வாரம் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதனால் தனது காரை எங்கு நிறுத்துவது என்று குழம்பிக்கொண்டிருந்தார்.

கட்டணம் கொடுத்து தனது காரை நிறுத்தலாமா அல்லது உறவினருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்தார். ஆனால் அதில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் காரை நிறுத்த புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தார்.

கிரேன் ஒன்றை வாடகைக்கு கொண்டு வந்தார். அந்த கிரேன் மூலம் தனது காரை அப்படியே தூக்கினார். அதனை தனது வீட்டின் மாடியில் மெதுவாக கொண்டு போய் நிறுத்தினார். காரை கிரேன் மூலம் வீட்டு கூரையில் நிறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

அது எவ்வளவு காலத்திற்கு வீட்டின் கூரையின் மீது இருக்கும் என்பது குறித்து கார் உரிமையாளர் எந்த வித தகவலையும் பகிரவில்லை. அதோடு கிரேன் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு முன்னதாக உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதிகள் ஏதேனும் பெறப்பட்டனவா போன்ற விவரங்களை வெளிப்படுத்தவில்லை.

இது தொடர்பான வீடியோ வெளியான உடன் நெட்டிசன்களில் சிலர் இதனை பாராட்டி இருந்தாலும், இவ்வளவு கனமான வாகனத்தை ஒரு கட்டிடத்தின் மீது வைப்பதன் நடைமுறைச் சாத்தியம் மற்றும் பாதுகாப்பு குறித்து வேறு சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்கார்பியோ கார்களின் விலை ரூ.13.37 லட்சத்தில் தொடங்கி மாடலுக்கு தக்கபடி விலை மாறுபடுகிறது. வழக்கமான வாகன நிறுத்துமிடங்கள் ஏற்றதாக கிடைக்காத பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *