கோயிலின் வடக்குப் பகுதியில், சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. திங்கள்கிழமை அன்று அதில் நீராடி, சோமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை அரளி சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், சந்திர தோஷம் விலகும்; சந்தோஷம் நிலைக்கும் என்பது ஐதீகம்!
ஆலயப் பிராகாரத்தில், ஆறுமுகனுக்கும் சந்நிதி உள்ளது. ஓராறு முகமும் ஈராறு கரங்களுமாக மயிலின் மீது அமர்ந்த கோலத்தில், தேவியருடன் காட்சி தருகிறார் இந்த ஆறுமுகப் பெருமான். சஷ்டி, கார்த்திகை, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திர தினம் ஆகிய நாள்களில் இவரை வழிபடுவது விசேஷம். லட்சுமிநாராயணப் பெருமாளும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
எப்படிச் செல்வது?: சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது மகேந்திரவாடி. பாலா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் நெமிலியில் இருந்து, சுமார் 7 கி.மீ. தொலைவு; காஞ்சிபுரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் பேருந்துகள், மகேந்திரவாடி வழியாகச் செல்லும்.
ஏரிக்காத்த அம்மன்!
மகேந்திரவாடி மகேந்திர தடாகம் ஏரிக்கரையில் சப்தமாதர்களுக்காகவே ஓர் அழகிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கௌமாரி, வராகி, மகேந்திரி, பைரவி, பிராம்மி, சாமுண்டி, வைஷ்ணவி ஆகிய ஏழு தெய்வங்களுடன் விநாயகப் பெருமானும் காட்சி தருகிறார்.
சப்தமாதர்களில், பைரவிதான் இங்கே பிரதான தெய்வம்! ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என ஊர்மக்கள் அழைக்கின்றனர்.
ஒருமுறை, ஏரியின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டதாம். ஊர் மக்கள் சப்தமாதரை வழிபட்டனர். அப்போது, கரை உடைந்துவிடாமல் ஏரியையும், வெள்ளத்தைத் தடுத்து மக்களையும் காப்பாற்றியதால், இந்த அம்பிகையை ஏரி காத்த அம்மன், மதகு காத்த அம்மன் என்று வழிபட ஆரம்பித்தனராம். இந்தப் பெயர்களே ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என மருவியதாகச் சொல்கிறார்கள்!