ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு.. கைகோர்த்த அதானி – அமீரகத்தின் IHC.. அலுமினியம் துறையில் மெகா திட்டம் | Adani Group, UAE’s IHC to Invest $11.5 Billion in Odisha Aluminium Mega Project

Spread the love

India

-Vigneshkumar

இந்தூர்: அதானி குழுமம் மற்றும் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் இணைந்து, ஒடிசா அரசுடன் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தி சுற்றுச்சூழல் சிஸ்டத்தை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ஏறத்தாழ ரூ. 1.08 லட்சம் கோடி) மதிப்பிலான இந்த பிரம்மாண்ட திட்டம், உலகிலேயே அலுமினிய துறையில் மேற்கொள்ளப்படும் மிக பெரிய முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, மாநில தொழில்துறை அமைச்சர் சம்பத் சரண் ஸ்வைன் மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரன் அதானி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Adani and IRH sign massive Odisha aluminium project agreement

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த திட்டம், அலுமினிய உற்பத்தியின் அனைத்து நிலைகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட அலுமினா சுத்திகரிப்பு ஆலை, ஆண்டுக்கு 20 லட்சம் டன் திறன் கொண்ட அலுமினியம் உருக்கு ஆலை மற்றும் 10 லட்சம் டன் திறன் கொண்ட அலுமினியம் பூங்கா ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

இந்த ஆலைகளின் தடையற்ற செயல்பாட்டிற்கு தேவையான மின்சாரத்தை வழங்க 4,000 மெகாவாட் திறன் கொண்ட சொந்த மின் உற்பத்தி நிலையமும், 400 மெகாவாட் மின்சாரத்தை வழங்கக்கூடிய கிரீன் எனர்ஜி கட்டமைப்பும் அதே திட்டத்தின் கீழ் குஜராத்தில் நிறுவப்பட உள்ளன.

பொருளாதார தாக்கம்

இந்த மாபெரும் திட்டத்தின் மூலம் ஒடிசா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. குறிப்பாக இந்த ஆலைகளின் கட்டுமானப் பணியின் போது சுமார் 35,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இவை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 18,500 பேருக்கு நிலையான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கரன் அதானி தெரிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கும், அதைச் சார்ந்த சிறு தொழில்கள் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளங்கள் நிறைந்த ஒடிசா

இந்தியாவின் தொழில்துறைக்குத் தேவையான பாக்ஸைட் தாதுக்கள் ஒடிசாவில் மிக அதிகளவில் நிறைந்துள்ளன. நாட்டின் மிக பெரிய பாக்ஸைட் இருப்பு, பாதிக்கும் மேற்பட்ட இரும்புத் தாது இருப்பு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட முக்கிய தாதுக்கள் ஒடிசா மாநிலத்தில் மட்டுமே உள்ளன. இந்த இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, வெறும் மூலப்பொருட்களை வழங்கும் மாநிலமாக இல்லாமல்.. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி மையமாக ஒடிசாவை மாற்றுவதே இத்திட்டத்தின் லட்சியமாகும்.

மத்திய அரசின் ‘விக்சித் பாரத் 2047’ (வளர்ச்சியடைந்த இந்தியா) திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஒடிசாவின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று இந்த ஒப்பந்த விழாவில் சுட்டிக்காட்டப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *