சிவகங்கையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.100 கிலோ “மெத்தாம்பேட்டமைன்’ என்ற பயங்கர போதைப்பொருளைப் பறிமுதல் செய்த சிவகங்கை நகர் காவல்துறையினர், இது தொடர்பாகப் பதுங்கியிருந்த 4 சர்வதேசக் கடத்தல் ஆசாமிகளை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்…
வசமாகச் சிக்கிய 4 ‘குருவிகள்’!
சிவகங்கை ,இந்திரா நகர் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு வீட்டில் ஏதோ விபரீதமான விவகாரத்தில் நள்ளிரவில் பயங்கர தகராறு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ‘சரக்கை’ பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் அடிதடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அக்கம் பக்கத்தினர் கொடுத்த ரகசியத் தகவலின் பேரில் சிவகங்கை டி.எஸ்.பி. அமல அட்வின் மற்றும் நகர் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீஸ் டீம் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்தது.
அங்கே சந்தேகத்திற்கிடமான வகையில் ரத்தக் காயங்களுடன் அமர்ந்து, போதைப்பொருள் பொட்டலங்களைப் பங்கு பிரித்துக் கொண்டிருந்த 4 பேரை போலீஸார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ரசூல் தீன் (35) இளையான்குடி புதூர், திப்பு சுல்தான் தெரு. அபுசாகுபர் சாதிக் (26) திருவல்லிக்கேணி, சென்னை. முகமது ஹபீஸ் (28 ), ஜெயில் சந்திப்பு பகுதி, திருச்சி.முகமது ரபீக் என்ற பாபு (30) – வரகனேரி, திருச்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடமிருந்து 3.100 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.