சக்கர்பெர்க்கின் புதிய கோட்டை பற்றிய தகவல்கள்
ஸ்ட்ரான்சலி கோட்டை, 19ஆம் நூற்றாண்டில் கோதிக் பாணியில் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட மாளிகையாகும். இது பிளாக்வாட்டர் பள்ளத்தாக்கில், பிளாக்வாட்டர் நதிக்கரையில் அமைந்துள்ளது. முன்னாள் டோரி கட்சி எம்.பி.யான ஜான் கெய்லிக்காக, சுமார் 1830-ஆம் ஆண்டில் இது கட்டப்பட்டது.
பிரையன் டி ப்ரெஃப்னி மற்றும் ரோஸ்மேரி ஃபோலியட் எழுதிய ‘தி ஹவுசஸ் ஆஃப் அயர்லாந்து’ என்ற புத்தகத்தின்படி, இந்த கோட்டை 16,000 சதுர அடி பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவைப் பற்றி குறிப்பிடும்போது, “சமையலறையிலிருந்து சாப்பாட்டு அறைக்குச் செல்ல நான்கரை நிமிடங்கள் விறுவிறுப்பாக நடக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கோட்டையை, தனியார் முதலீட்டு நிறுவனமான RAB கேப்பிட்டலின் இணை நிறுவனர் மைக்கேல் ஆலன்-பக்லி மற்றும் அவரது மனைவி ஜியான்கார்லா ஆகியோர் சக்கர்பெர்க்கிற்கு விற்றுள்ளனர் எகிறார்கள். அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக இந்த தோட்டத்தில் வசித்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “25 ஆண்டுகள் வாழ்ந்த எங்கள் வீட்டை நல்ல நினைவுகளுடன் விட்டுச் செல்கிறோம். ஸ்ட்ரான்சலி கோட்டையைப் பாதுகாத்து புனரமைக்க எங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கூறுகிறோம். மார்க்கும் அவரது குடும்பத்தினரும் இந்த சொத்தை தொடர்ந்து பராமரித்து, தங்கள் இல்லமாக மேம்படுத்துவார்கள் என்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என்று கூறியுள்ளனர்.
மார்க் சக்கர்பெர்க்கும் பிரிசில்லா சானும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிப்பார்கள் என்றும், அயர்லாந்துக்கு வரும்போது இந்த கோட்டையைத் தங்குமிடமாகப் பயன்படுத்துவார்கள் என்றும் நம்பப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்குச் சொந்தமான மெட்டா, 2009 முதல் அயர்லாந்தில் தனது ஐரோப்பிய தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அங்கு சுமார் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.
அயர்லாந்தில் ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற சக்கர்பெர்க்கின் ஆர்வம் கடந்த கோடையில் வெளிப்பட்டது. லிபர்ட்டி மீடியா தலைவர் ஜான் மலோன், தனது காஸ்டில்மார்டின் ஹவுஸ் மற்றும் எஸ்டேட்டை வாங்குவதற்கு சக்கர்பெர்க் முன்வந்ததாகக் கூறியிருந்தார்.
பெரிய ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வது சக்கர்பெர்க்குக்கு புதிதல்ல. பாலோ ஆல்டோவில் 11-க்கும் மேற்பட்ட சொத்துக்களையும், புளோரிடா, வாஷிங்டன் டி.சி. மற்றும் ஹவாய் ஆகிய இடங்களிலும் அவருக்கு வீடுகள் உள்ளன.
தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் பெரிய வீடுகளை வாங்குவது இது முதல் முறையல்ல. சமீபத்தில், xAI இணை நிறுவனர் டோனி யுஹுவாய் வூ, சிலிக்கான் வேலிக்கு அருகே ₹670 கோடி மதிப்புள்ள மாளிகை ஒன்றை வாங்கியது குறிப்பிடத்தக்கது.