India
oi-Vishnupriya R
லடாக்: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் லடாக் வீடு மண்ணால் ஆனது என்ற போதிலும் ஹீட்டரே இல்லாமல் வீடு கதகதப்பாகவே இருக்கும். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
லடாக்கை சேர்ந்த பொறியாளர், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். இவர் அண்மையில் நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

நீண்ட காலமாக தனது சமூக பணிகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் அறியப்படுகிறது. தற்போது அவரது லடாக் வீட்டின் கட்டடக் கலை குறித்து மக்கள் ஆர்வமுடன் அறிந்து வருகிறார்கள். அப்படி ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
அது என்ன என்பதை பார்க்கலாம். பனிகள் சூழ்ந்திருக்கும் லடாக்கில் அவரது வீட்டை அவரே டிசைன் செய்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்சுக் தனது வீட்டை சுற்றி காட்டினார். இது டிரைபல் ஹவுஸ் என அழைக்கப்படுகிறது.
இந்த வீட்டில் சிமென்ட் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக களி மண்ணை கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. லடாக்கின் பாரம்பரிய கட்டடக் கலையில் சில புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வாங்சுக் கூறியிருப்பதாவது: பாரம்பரிய முறையில் வீடுகளை கட்டுவதை நாம் அவ்வப்போது மறந்துவிடுகிறோம். மணல் வீடுகளை தற்போதெல்லாம் யாரும் கேள்விக் கூட பட்டிருக்க மாட்டீர்கள். நான் சிறப்பான ஒரு வீட்டை கட்டியிருக்கிறேன்.
நான் கட்டிய வீட்டில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நல்ல விஷயங்களை புகுத்திய நான் இன்றைய காலத்திற்கேற்ப நவீனத்தையும் கொண்டு வந்துள்ளேன். இந்த வீட்டில் மிகவும் குறைந்த உயரத்திலேயே அதாவது தரைக்கு நெருக்கமான இடத்தில், நாற்காலிகள், டைனிங் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது.
லடாக் மக்கள் தாழ்வான இடங்களில் உட்காருவதையே விரும்புவார்கள். வீட்டின் மேற்கூரை மரத்தினால் ஆனது. சுவர் மண்ணால் ஆனது. சமையல் அறை என்பதே கிடையாது. அதற்கென அறை இருக்காது. ஏனென்றால் சமைப்பவர், மற்ற உறுப்பினர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதால் ஓபன் கிச்சன் உள்ளது.
இங்குள்ள கழிப்பறைக்கு நீர் தேவையில்லை. மனிதக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு இயற்கையான முறையில் உரமாக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
லடாக்கின் உறைபனி குளிர்காலத்தில் கூட செயற்கை ஹீட்டர்களோ விறகு வைத்து எரிமூட்டுவதோ கிடையாது. வீட்டின் ஒரு பகுதி சுவர் முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கும். அந்த கருப்புச் சுவரில் தண்ணீர் பாட்டில்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பகல் நேரத்தில் சூரிய ஒளியை பெற்று இந்த தண்ணீர் சூடாகி இரவிலும் வீட்டை கதகதப்புடன் வைத்துக் கொள்கின்றன. லடாக் மக்களும் பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதுதான் இது போல் வீடு கட்டியதன் நோக்கம் என வாங்சுக் சொல்கிறார்.