International
oi-Hema Vandhana
லண்டன்: லண்டனில் இருந்து திரும்பிய முதல்வர் விஜய்க்கு இன்று சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு கிடைத்தது. இந்த பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பலன் மொத்தமாக தமிழகத்துக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது…!!
தமிழ்நாட்டை உலக அளவில் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டு பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் இதுகுறித்து கூறும்போது, “லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.15300 கோடி.. இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகள்
குறிப்பாக, தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதுடன் மட்டுமல்லாமல், உலக நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யும் இடமாக மாநிலத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த லண்டன் பயணத்தில் வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கட்டமைப்பு உபகரணங்கள், Global Capability Centres உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
திருவள்ளூருக்கு 300 கோடி ஜாக்பாட்
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் Wilson Power Solutions நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்யும் திட்டமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 400 வேலைவாய்ப்புகள் உருவாகும்.. அதேபோல், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாக நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க தமிழ்நாட்டை தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் ரூ.3,000 கோடி முதலீட்டுக்கான விருப்பக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த Motor Sports City அமைக்கும் திட்டம் தொடர்பாகவும் இந்த பயணத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்யூட்டில் Race Control, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் பார்வையிட்டுள்ளார்.
தமிழ் சொந்தங்களுக்கு நன்றி
லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை முதல்வர் விஜய் சென்னை திரும்பினார். அப்போது, லண்டனில் தமக்கு நல்ல ஆதரவு அளித்த அங்கு வாழும் தமிழ் சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகள் மூலம் புதிய தொழில்கள், வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதுடன், தமிழ்நாட்டை நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக தொடர்ந்து வளர்ப்பதற்கான வெளிநாட்டு பயணங்கள் தொடரும்” என்று என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு பலன்?
எனினும், இந்த லண்டன் பயணத்தின் முக்கியத்துவம் ரூ.15,300 கோடி என்ற எண்ணிக்கையில் மட்டும் இல்லை. அதைவிட முக்கியமாக, முதலீடுகள் பல்வேறு துறைகளில் வருவதும், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் தொழில் வாய்ப்புகள் உருவாகும் நிலை இருப்பதும் கவனிக்கத்தக்கது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற அறிவிப்பு நடைமுறையில் எவ்வளவு வேகமாக செயல்படுத்தப்படுகிறது என்பதுதான் அடுத்த முக்கிய கட்டமாகும். ஒப்பந்தங்கள் அறிவிப்பாக மட்டும் நின்றுவிடாமல் தொழிற்சாலைகள், R&D மையங்கள், புதிய வேலைவாய்ப்புகளாக மாறினால், இந்தப் பயணத்தின் உண்மையான பலன் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் என்று கருத்து கூறுகிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்…!!!