நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக் சரவணன் (வயது: 32). பொறியியல் பட்டதாரியான இவருக்கும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்கிற வர்ஷினிக்கும் வரும் செப்டம்பர் 17-ம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை வழங்க வேண்டும் என அசோக் சரவணன் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, லண்டனில் வசிக்கும் தனது சகோதரியின் உதவியுடன் சுவிட்சர்லாந்தில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, நிலாவில் நிலம் வாங்குவதற்காக விண்ணப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 23,000 செலுத்தி, நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியதாக அசோக் சரவணன் கூறுகிறார். இதற்காக, 10 பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் அந்தத் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருங்கால மனைவிக்கு உலகில் யாரும் வழங்காத வித்தியாசமான பரிசை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிலாவில் நிலம் வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து, ராசிபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.