பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள குமான் நகர் பகுதியில் பிட்புல் (Pitbull) ரக நாய் தாக்கியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டியாலாவைச் சேர்ந்த அங்கித் சபர்வால் மற்றும் அவரது மனைவி ஷிபாலி ஆகியோர் வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக குமான் நகருக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டபோது, உள்ளிருந்து பாய்ந்து வந்த பிட்புல் நாய் ஷிபாலியைத் தாக்கியது. நாயின் கடியால் அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மனைவியைக் காப்பாற்ற முயன்ற அங்கித்தின் கால்கள் மற்றும் முதுகிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், நாய் தம்பதியைத் தாக்கும் போது, சுற்றுப்புற மக்கள் அதை விரட்ட தீவிர முயற்சி செய்வதைக் காண முடிகிறது. வீட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் குச்சியால் நாயைக் கட்டுப்படுத்த முயன்றும் அது பலனளிக்கவில்லை. பின்னர், கூடுதல் நபர்கள் குச்சிகளுடன் வந்து நாயை விலக்கி தம்பதியை மீட்டுள்ளனர். நாய் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் அங்கித் புகாரளித்துள்ளார்.