பின்னர் கர்நாடகாவில் எழுந்த அழுத்தத்தை தொடர்ந்து அவரே முதல்வர் விஜய்யை கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சொல்கிறார். அப்போதும் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது. முதல்வரின் கர்நாடகா பயணம் ரத்து குறித்தும் எந்தத் தகவலும் இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் டெல்டா விவசாயிகளின் உரிமை விவகாரத்தில் இதற்கு முந்தைய எந்த அரசும் இத்தனை ரகசியம் காத்தது இல்லை. திமுக, அதிமுக என தெருவில் எதிர் எதிராக நின்று அடித்துக் கொள்ளும் கட்சிகள் கூட ஆட்சியில் இருக்கும் போது அனைத்துக்கட்சி கூட்டத்தை எல்லா தரப்பினருடைய கருத்தையும் கேட்டிருக்கின்றனர். ஆனால், தவெக அரசு அதை சட்டை செய்யவே இல்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் அனைத்துக்கட்சி கூட்டம் வேண்டும் என்கின்றனர். ஆளும் அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை.
இந்த மாதிரியான சென்சிட்டிவான விவகாரங்களில் தமிழக மக்களின் குரலாக அனைத்து கட்சிகளையும் ஒரே புள்ளியில் இணைக்க வேண்டியது ஆளுங்கட்சியின் பொறுப்பு. ஆனால், இங்கே கருணாநிதி, ஸ்டாலின் என முன்பு ஆண்டவர்களின் மீது பழியை போட்டு அரசியல் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது தவெக. கட்சிகளை விடுங்கள், விவசாயிகளிடம் பேசினீர்களா? பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ஆலோசனை கேட்க தமிழகம் முழுவதுமிருந்து விவசாயிகளை வர வைத்தீர்கள். செங்கோட்டையன், ஆனந்த் உட்பட 10 அமைச்சர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முதல்வர் கர்நாடகா செல்வது குறித்தோ மேகதாது விவகாரம் குறித்தோ அந்த கூட்டத்தில் பேசப்படவே இல்லை. விவசாயிகளாக எழுந்தரித்து ‘முதல்வர் கர்நாடகாவுக்கு செல்ல வேண்டாம்’ என கொதித்து பேசியிருக்கின்றனர். அதற்கு அமைச்சர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.