யார் இந்த விநாயகர்… இவர் இங்கே எழுந்தருளியது எப்படி என்பது குறித்து தலபுராணம் சுவாரஸ்யமான புராண சம்பவம் ஒன்றைச் சொல்கிறது.
ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்தப் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அதற்கு நன்றிக்கடனாக கடல் பொருட்களால் அதாவது சிப்பி, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருள்களை வைத்து, தேவேந்திரன் விநாயகர் திருமேனியைப் பிடித்துவைத்து வழிபட்டதாக ஐதீகம்.

இவரை வழிபட்டால், பிரளயம் போன்று வரும் துன்பங்களையும் சடுதியில் போக்கி நம்மைக் காப்பாற்றுவார். இவரருளால் தேன் போன்று இனிமையான வாழ்வைப் பெறலாம் என்பது ஐதிகம்.
பொதுவாக பிரளய காலத்தில் ஈசனுக்குள்ளே சகலமும் ஒடுங்கும். பிரளயத்தில் இருந்து சகலத்தையும் ஈசன் காத்தருள்வார் என்பார்கள். பிரளயம் காத்த விநாயகரான இவர் ஈசனின் திருப்பணியை இங்கே செய்கிறார் என்கிறார்கள்.
பிரளயம் உண்டானபோது ஏழு கடல் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தார். அதனால் தேவர்கள் இந்தக் கணபதியைப் பிரதிஷ்டை செய்து பிரளயம் காத்த விநாயகர் எனப் போற்றினார்.