திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “முதல்வர் கரூர் செல்லவிருப்பதாக எழுந்த செய்திகள் வெளியாகின்றன. முதலமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில், இந்த எதிர்பார்ப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் உள்ளது. வி.சி.க கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாகவும், திருச்சி கிழக்கு தொகுதியைக் கேட்க முயற்சிப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. நான் எந்தவொரு இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன்.

இது தொடர்பாக த.வெ.க தலைமைக்கு விசிக எந்தவித அழுத்தத்தையும் தரவில்லை. எந்த இலாகாவையும் மாற்றித் தருமாறும் கோரவில்லை. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் திடீர் திடீரென பதவி விலகும் சூழல் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. இது குதிரை பேரமா என்றால், அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்பதால் என்னால் கருத்து கூற முடியாது. அதேநேரம், இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறோம்.