விஜய்க்கு ஓட்டு போட்டு.. தப்பு பண்ணிட்டோம்! சாட்டையால் அடித்துக்கொண்ட விவசாயிகள்! | Farmers Lash Out at TVK Government: ‘We Made a Mistake Voting for You’ Over Meagre Loan Waiver

Spread the love

Tamilnadu

oi-Halley Karthik

சேலம்: கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடியை தவெக அரசு முழுமையாக செய்யவில்லை என்றுகூறி, தவெகவுக்கு வாக்களித்தது தவறு என விவசாயிகள் தங்களை தாங்களே சாட்டையால் அடித்துக்கொண்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், கடன் தள்ளுபடி குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தது. அதாவது 5 ஏக்கர் அளவில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றிருந்தால் அது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கும் மேல் பயிர்க்கடன் பெற்றிருந்தால் அந்த கடனில் 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் நில அளவை கணக்கில் எடுக்காமல், கடன் தொகையை தவெக அரசு கணக்கில் கொண்டது.

TVK Government

இதுதான் பிரச்சனைக்கு காரணம். அதாவது ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் உத்தரவை வெளியிட்டார். இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சொன்னது ஒன்று.. செய்யுறது ஒன்னா? என்று கேள்வி எழுப்பி.. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

விஷயம் சீரியஸாவதை உணர்ந்த தவெக அரசு, ரூ.75,000 வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனாலும் முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று சேலம் நல்லகவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன் திரண்ட விவசாயிகள், தவெக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி.. தவெகவுக்கு வாக்களித்து தவறு செய்துவிட்டோம் என்று சொல்லி.. சாட்டையால் தங்களை தாங்களே அடித்துக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

விவசாயிகள் தங்களை தாங்களே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தியிருக்கும் சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

விஜய்யை ரவுண்டு கட்டும் பிரச்சனைகள்

விவசாயிகள் மத்தியில் இப்படி போராட்டம் வெடித்திருக்கிறது எனில், மறுபுறம் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை மின்வெட்டு. மின்சாரத்துறை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில், சுமார் 60,000க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் மின்வாரியத்துறையில் இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும் என்பதுதான் சர்ச்சைக்கு காரணம்.

ஏற்கெனவே பணியில் இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள், தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் மின்வாரியத்துறையில் பணிகள் மந்தமாக நடக்கின்றன. இது மின்வெட்டை மேலும் அதிகரிக்கும். இப்படியாக திரும்பும் பக்கம் எல்லாம் தவெக அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருப்பதால், முதல்வர் விஜய் அதிருப்தியடைந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *