“விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது: போர்க் கவசமாக இருந்து பாதுகாப்போம்" – வைகோ ஆவேசம்!

Spread the love

விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் காவல் அரணாக, போர்க் கவசமாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்திருக்கிறார். பல்லடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தின் 25 மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்காமல் போகும். இதற்குப் பின்னணியில் இருக்கும் முக்கிய வில்லன் மத்திய பா.ஜ.க அரசுதான். அவர்கள் வெளிப்படையாக அனுமதி தராமல், மறைமுகமாக நிதி ஒதுக்கி அணை கட்ட ஊக்குவிக்கிறார்கள். மேகதாது அணை விவகாரத்திற்காக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தும் நடைப்பயணத்தை வரவேற்கிறேன்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தற்போதைய த.வெ.க ஆட்சியை தி.மு.க-வினர் ‘குதிரை பேரம்’ என்று விமர்சிக்கின்றனர். முன்னாள் தி.மு.க ஆட்சியில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. கம்ப ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தீர்களே, அந்தப் பேரத்திற்குப் பெயர் ‘பெருச்சாளி பேரமா’? குதிரை பேரத்திற்கு வழிகாட்டியதே தி.மு.க-தான். இப்போது ஆட்சி கைவிட்டுப் போனதால் அதைத் தாங்க முடியாமல், இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு அனுமதி பெற வேண்டுமானால் பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை கப்பம் கட்ட வேண்டியிருந்தது. ஆனால், தற்போதைய த.வெ.க அரசு ஊழலை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. பத்து காசு லஞ்சம் இல்லாமல் இங்கே அனுமதிகள் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த நேர்மையான அரசை வீழ்த்த எதிரிகள் எத்தனை பகீரத முயற்சிகளை மேற்கொண்டாலும், நானும் என் தோழர்களும் தவெக அரசுக்கு அரணாக நின்று பாதுகாப்போம்.

கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சிப்பது கூட்டணி தர்மத்திற்கு உகந்தது அல்ல என்பதாலேயே கடந்த காலத்தில் அமைதி காத்திருந்தேன். வரவிருக்கும் இடைத்தேர்தலில் த.வெ.க அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு ம.தி.மு.க-வின் முழு ஆதரவு இருக்கும். தவெக – மதிமுக இடையே மிகச் சிறந்த, இணக்கமான உறவு நீடிக்கிறது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *