விஜய் கழுத்தை நெரிக்கும் இடதுசாரிகள்….இனிமே தான் ஆட்டமே இருக்கு….! – Kumudam

Spread the love

ஒன்றிய அரசு அரசு நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலத்தின் பாடல்களை முதலில் பாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையிலும் கூட, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் தமிழை மூன்றாம் நிலைக்கு தள்ளச் செய்தது என்பது அவரது தமிழ், தமிழர் விரோத மனநிலையை வெளிப்படுத்துகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இடம்பெற்றதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து இடதுசாரி கட்சிகள் விஜய்க்கு எதிரான அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்த பிறகு, பெரும்பான்மையை நிரூபிக்க இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. இருப்பினும், “ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு அளித்தோம்; தவெகவுடன் கூட்டணியில் இல்லை” என்ற நிலைப்பாட்டை சிபிஎம் மற்றும் சிபிஐ தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காதது குறித்து இடதுசாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இடதுசாரிகள் தம்முடன் கூட்டணி கட்சியாக இருக்கின்றன என்று தவெகவினர் ஒருபக்கம் கூறிவரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  நாங்கள்  குடியரசு தலைவரின் ஆட்சி அமைந்து விட கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவை தந்தோம்.

ஆனால் நாங்கள் தவெகவுடன் கூட்டணியில் இல்லை என்று தொடர்ந்து இடதுசாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்திருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து புறக்கணிக்கபடும் நிலையில் அதுகுறித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் எந்தவொரு  எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது தற்போது இடதுசாரியினர் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனையில் முதலமைச்சர் விஜய் அமைதி குறித்து இடதுசாரிகள் அதிருப்தியில் இருப்பதாக இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுகுறித்து சி.பி.எம்ன் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்விகளை எழுப்பி உள்ளார். அதேபோல சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியனும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசின் சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் உட்பட, தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் “வந்தே மாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டதையும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதையும் கண்டித்துள்ளார்.

மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் விழாவை புறக்கணித்தது வரவேற்கத்தக்கது என்றாலும், தமிழக அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல், ஆளுநரின் ஆலோசனையின் அடிப்படையில் பல்கலைக்கழகம் செயல்படுவது மாநில உரிமை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிபிஐ வலியுறுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படாதது வருத்தமளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “வந்தே மாதரம்” பாடல் தொடர்பாக ஏற்கனவே வரலாற்று ரீதியாக எழுந்துள்ள சர்ச்சைகளையும் சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, மாநில அரசு நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநில பாடலுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுக்கு மாறாக செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழக அரசும் முதலமைச்சர் விஜயும் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக மேலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நீட்டுக்கு எதிராக உலகளவில் மாபெரும் போராட்டம் நடைபெற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அதுகுறித்து எந்தவொரு ரியாக்ஷனும் இல்லாமல் தவெக அரசு அமைதியாக இருந்தது அனைவரும் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்த்தாய் தொடர்ந்து புறந்தள்ளப்படுவது தொடர்பாகவும் எந்தவொரும் ஆக்ஷனையும் தவெக எடுக்காது குறித்து இடதுசாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனால் இடதுசாரிகள் தற்போது விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டை நேரடியாக தெரிவித்து வருகின்றனர். இது விஜயின் அரசியலை கேள்விகுறிக்கு தள்ளப் போகிறாதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *