International
oi-Halley Karthik
காத்மாண்டு: GenZ தலைமுறையினரின் ஆதரவுடன் நேபாளத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘பாலேந்திர பலேன் ஷா’ தற்போது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்று வெறும் 150 நாட்களில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அரசியல் என்பது யாருக்கு எப்போது கை கொடுக்கும்? எப்போது யாரை காலை வாரும் என்பது முன்கூட்டியே கணிக்க முடியாது. அப்படியான நிலைமைதான் தற்போது நேபாள பிரதமருக்கு ஏற்பட்டிருக்கிறது.

விஜய் மாதிரிதான்
GenZ இளைஞர்கள் எப்போதும் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள். அப்படித்தான் நேபாளத்தில் நீண்ட கால அரசியலை பார்த்து சலித்துக்கொண்ட இளைஞர்கள்.. புதிய அரசியல் தலைவருக்கு ரெட் கார்பெட் போட்டு வரவேற்றனர்.
இந்த மாற்றத்தை உணர்ந்து தன்னை முன்னிறுத்திக்கொண்டவர்தான் பலேன் ஷா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் GenZ இளைஞர்கள் அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி ரோட்டுக்கு வந்து போராடினர். இது தேர்தலிலும் எதிரொலித்தது. ‘ராஷ்டிரிய ஸ்வதந்த்ர’ எனும் கட்சி மொத்தமுள்ள 275 எம்பி தொகுதிகளில்.. 182ஐ கைப்பற்றி பாரம்பரியமாக நேபாளத்தை ஆண்டு வந்த கட்சிகளை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றது. ராப் பாடகராகவும், காத்மாண்டுவின் மேயராகவும் இருந்த பலேன் ஷா புதிய பிரதமராக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
சொதப்பல்கள் தொடக்கம்
நேபாளம் குட்டி நாடாக இருந்ததால் பெரிய அளவுக்கு பொருளாதாரத்திற்கு இந்தியாவைதான் சார்ந்து இருந்தது. உள்நாட்டின் வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாததால்.. வறுமையும், வேலையின்மையும், பொருளாதார மந்த நிலையும் இருந்தது. இதெல்லாம் புதிய ஆட்சியில் காணாமல் போகும் என்று GenZ இளைஞர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு.
முதல் பிரச்சனை இந்தியாவிலிருந்துதான் தொடங்கியது. அதாவது, இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குள் வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை பலேன் ஷா உயர்த்தினார். இதனால் சாமானிய மக்கள் அன்றாட தேவைகளுக்கு வேண்டிய போருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
கடுமையான விதிகள்
இரண்டாவது பிரச்சனை காத்மாண்டு போலீசாரால் வெடித்தது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் கணேஷ் நேபாளி எனும் 24 வயது இளைஞர் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். புதியதாக பொறுப்பேற்ற அரசு.. போக்குவரத்து, பார்க்கிங் விதிகளை தீவிரமாக்கியது. இதனால், விதிமுறைகளை மீறியதாக கணேஷின் காரை பறிமுதல் செய்த போலீசார்.. எக்கச்சக்கமாக இஷ்டத்திற்கு அபராம் போட்டிருந்தனர். எவ்வளவோ போராடி பார்த்தும் காரை மீட்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் காத்மாண்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு கணேஷ் தீக்குளித்து உயிரை விட்டார்.
இளைஞர்கள் போராட்டம்
இது GenZ இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றம் வரும் என்றுதான் பலேன் ஷாவை பதவியில் உட்கார வைத்தோம்.. ஆனால், அவரும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக.. வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் என்று கொந்தளித்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு கணேஷின் மரணத்திற்கு நீதி கேட்டனர்.
பேசத் தெரியாமல் பேசியவர்
இது போக.. இந்தியாவுடனான எல்லை பிரச்சனை குறித்து சேம் சைடு கோல் அடிப்பது போல பலேன் ஷா பேசியிருந்தார். நேபாளமும் இந்தியாவின் எல்லைகளை ஆக்கிரமித்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் உளறினார். “நம்மளே தம்மாத்துண்டுதான் இருக்கிறோம்.. இதுல இந்தியாவை ஆக்கிரமித்துள்ளோமா?” என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன.
இதெல்லாம் கூட.. பலேன் ஷா அரசியல் முதிற்சியற்றவர்.. அதனாலத்தான் இப்படி நடந்துக்கிட்டார் என்று சொல்லி சமாளித்துவிடலாம். ஆனால், பலேன்
ஷா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்.. 39 நாடாளுமன்ற கூட்டங்களில் வெறும் 5 கூட்டங்களில் மட்டும்தான் பங்கேற்றிருந்ததை எல்லாம்.. எது சொல்லியும் சமாளிக்க முடியாது.
சிக்கலில் பிரதமர்
இப்படியாக GenZ இளைஞர்கள் ஆதரவுடன் பிரதமரான பலேன் ஷாவுக்கு எதிராக GenZ இளைஞர்களே எதிர்ப்பு குரல்களை எழுப்பியிருக்கின்றனர். இதனால் பலேன் ஷா பதவியேற்று 150 நாட்களில் அவரது பதவிக்காலம் முடிவை நெருங்கியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அவர் பதவியிலிருந்து தூக்கியெறியப்படலாம் என்று பேசப்படுகிறது.