நடுத்தரக் குடும்பங்களுக்கு பணவீக்கம் என்பது வெறும் விலைவாசி உயர்வு அல்ல; சம்பளம் உயர்வதைவிட செலவுகள் வேகமாக உயரும்போது சேமிப்பும் முதலீடும் பாதிக்கப்படுவதுதான் பெரும்பாலானோரின் உண்மையான பிரச்னை.
வருமானம் உயராமல் செலவுகள் மட்டும் உயரும்போது ஏற்கெனவே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பெரிதாகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் கடனாளிகள் ஆவதும் அதிகரிக்கும்.
எனவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையில் சில விஷயங்களைத் திட்டமிட்டுக்கொண்டால் அதன் தாக்கத்திலிருந்து நம்மையும் நம் குடும்பத்தின் நிதிநிலையையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
1. ஒவ்வொரு பொருளின் விலையையும் தெரிந்துகொள்ளுங்கள்:
சூப்பர் மார்க்கெட், மால் கலாசாரம் அதிகரித்த பிறகு பெரும்பாலானோரின் வாங்கும் பொருள்களில் விலை என்ன என்பதையே பார்ப்பதில்லை. இதுதான் முதலில் சரி செய்ய வேண்டிய பிரச்னை. பொருளின் விலை என்ன என்பது தெரிந்தால்தான் அது விலை உயர்ந்துள்ளதா என்பதே தெரியும்.
2. மாதச் செலவுக்கு பட்ஜெட் போடுங்கள்:
கடந்த 6 மாத வங்கி/யுபிஐ பரிவர்த்தனைகளைப் பாருங்கள். எங்கெல்லாம் உங்கள் பணம் போயிருக்கிறது என்பதைப் பட்டியலிடுங்கள். ஒவ்வொரு மாதமும் உங்களுடைய செலவுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது, அதில் மளிகை, வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய செலவுகள் எவ்வளவு, ஷாப்பிங், சினிமா, ஓட்டல் போன்ற ஆசை செலவுகள் எவ்வளவு என்பதைப் பார்த்து அதற்கேற்ப உங்கள் பட்ஜெட்டை மாற்றுங்கள். தேவையற்ற செலவுகளில் கட்டுப்பாடு கொண்டுவாருங்கள்.
3. சேமிப்பு மிகவும் அவசியம்:
அடுத்து வரும் 12 மாதங்களில் எந்தெந்தச் செலவுகள் தவிர்க்க முடியாதவை என்பதைப் பார்த்து முன்கூட்டியே அதற்கான பணத்தைத் தனியாக ஒதுக்கிவையுங்கள். உதாரணமாக, இன்ஷூரன்ஸ் பிரீமியம், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், பண்டிகைக் கால செலவுகள் போன்றவற்றுக்கு எவ்வளவு தேவை என்று திட்டமிட்டு மாதம்தோறும் சிறு தொகையைச் சேமித்து வந்தால் செலவுகளை எளிதில் சமாளித்துவிடலாம்.