விண்வெளிக்குச் செல்லும் கேரளத்தைச் பூர்வீகமாகக்கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற உள்ளார் அனில் மேனன். அமெரிக்க நாசா விஞ்ஞானியான டாக்டர் அனில் மேனனின் விண்வெளிப் பயணம் வரும் ஜூலை 14-ம் தேதி தொடங்குகிறது.
49 வயதான இவர், நாசாவின் அவசரக்கால மருத்துவப் பிரிவு மருத்துவராகவும், அமெரிக்க விண்வெளிப் படையின் கர்னலாகவும் பணியாற்றி வருகிறார். கசகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து, ரஷ்யாவின் “சோயுஸ் எம்.எஸ் 29′ (Soyuz MS-29) விண்கலம் மூலம் எக்ஸ்பெடிஷன் 75 திட்டத்தின் கீழ் மூன்று பேரைக் கொண்ட குழுவினர் விண்வெளிக்குச் செல்லவுள்ளனர். ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான பியோட்டர் டுப்ரோவ், அன்னா கிகினா ஆகிய இருவரும் இவருடன் பயணிக்கின்றனர். இந்த விண்வெளித் திட்டம் மொத்தம் எட்டு மாதங்கள் கொண்டதாகும்.

டாக்டர் அனில் மேனன் 2014-ம் ஆண்டு நாசாவில் ஃப்ளைட் சர்ஜனாக தனது பணியைத் தொடங்கினார். அவசரக்கால மருத்துவ நிபுணரான இவர், விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரும் ஆவார். 2018-ம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தை பூர்வீகமாகக் கொண்ட அனில் மேனன், பிரபல சுதந்திரப் போராட்ட வீரரும் அரசியல் தலைவருமான சேற்றூர் சர் சங்கரன் நாயரின் கொள்ளுப் பேரன் ஆவார். இவருடைய தந்தை சங்கரன் மேனன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கு உக்ரைனைச் சேர்ந்த எலிசபெத் சமோலென்கோ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் அனில் பிறந்தார். அனிலின் மனைவி அன்னா மேனனும் ஒரு விண்வெளி வீரர் ஆவார். அன்னா மேனன் கடந்த 2024 செப்டம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் என்ற தனியார் விண்வெளித் திட்டத்தின் மூலம் ஐந்து நாட்கள் புவி வட்டப்பாதையில் பயணித்துள்ளார்.