விநாயகர் சதுர்த்தி: “விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேற" – முதல்வர் விஜய் வாழ்த்து!

Spread the love

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்து அமைப்புகள், விழாக்குழுவினர் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரம்மாண்ட பந்தல்களில் நிறுவப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு அதிகாலை முதலே கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் கொழுக்கட்டை, சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு வழிபாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பொது இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கான வழிமுறைகளும், அதற்கான குறிப்பிட்ட தேதிகளும் மாவட்ட நிர்வாகங்களால் முறைப்படுத்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வழிபாட்டிற்குப் பிறகு, வரும் நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட ஊர்வலப் பாதைகள் வழியாகச் சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு கடல் மற்றும் நீர்நிலைகளில் முறைப்படி கரைக்கப்படவுள்ளன. இந்த நிலையில் முதல்வர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!’ என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *