விம்பிள்டன் தொடரில் பருந்து பயன்படுத்தப்படுவது ஏன்? ID கார்டுடன் சுற்றும் பருந்து? சுவாரசிய பின்னணி | Why there is a Hawk used as the official security for the Wimbledon matches?

Spread the love

Sports

oi-Shyamsundar I

சென்னை: உலகின் மிக முக்கியமான விளையாட்டு தொடர்களில் விம்பிள்டன் தொடருக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு. இப்படிப்பட்ட விம்பிள்டன் தொடரில்.. பருந்து ஒன்று காவலாளியாக பயன்படுத்தப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பருந்துதான் இந்த தொடரின் முக்கிய செக்யுரிட்டியே! அது எப்படி? ஏன்? என்று கேள்வி வருகிறதா?

உலகில் எத்தனையோ விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.

Hawk

அங்குள்ள பாரம்பரியமான ஆடை கட்டுப்பாடு, அசத்தலான புல் தரை மைதானம் எனப் பல சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த பிரம்மாண்ட டென்னிஸ் கொண்டாட்டத்திற்கு பின்னால் ஒட்டுமொத்த மைதானத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு காவலாளி இருக்கிறார். அந்த செக்யூரிட்டி மனிதர் அல்ல.. ஒரு பருந்து! ரூபஸ் என்ற பெயர் கொண்ட பருந்துதான்.. இந்த விம்பிள்டன் தொடரின் ஸ்பெஷல் செக்யூரிட்டி!

யார் இந்த விம்பிள்டன் பருந்து?

விம்பிள்டன் மைதானத்திற்குள் நுழைய வீரர்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், இந்த ரூபஸ் பருந்துக்கு மட்டும் விம்பிள்டன் நிர்வாகம் அதிகாரப்பூர்வ புகைப்படத்துடன் கூடிய ஐடி கார்டு வழங்கியுள்ளது.

ஒரு பறவைக்கு எதற்காக இவ்வளவு பெரிய முக்கியத்துவம்? இதன் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான அறிவியல் மற்றும் ரகசியத்தைப் பார்ப்போம்.

புல் தரையைக் கெடுக்கும் புறாக்கள்

விம்பிள்டன் தொடரின் மிக முக்கிய அடையாளமே அதன் பசுமையான புல் தரை மைதானங்கள் தான். இந்த புற்களைப் பராமரிப்பதற்காகப் பாரம்பரியமான புல் விதைகள் தூவப்பட்டு, குறிப்பிட்ட உயரத்தில் அவை வெட்டிப் பராமரிக்கப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், லண்டன் நகரில் மிக அதிகமாகக் காணப்படும் புறாக்கள், மைதானத்தில் தூவப்படும் புல் விதைகளைத் தின்று தீர்த்து விடும். இதனால் புல் வளருவது பாதிப்பு அடையும். இதனால் மைதானத்தின் தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.

அதுமட்டுமன்றி, விறுவிறுப்பான டென்னிஸ் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது, இடையே புறா வருவது இடைஞ்சலாக இருக்கும்.

ரசிகர்கள் உள்ள கூரைகளில் கூடுகட்டி வாழும் புறாக்கள் திடீரென மைதானத்திற்குள் பறந்து வந்து ஆட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். அதோடு ரசிகர்கள் மீது எச்சமிட்டும் அபாயம் உள்ளது. யோசித்து பாருங்கள்.. விராட் கோலி மீது புறா எச்சமிட்டால் அது பெரிய நியூஸ் ஆகிவிடும் இல்லையா? இந்த புறாக்கள் கேலரி இருக்கைகளை அசுத்தம் செய்வதும் வழக்கமாக உள்ளது..

எல்லோருக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்தப் புறாக்களை விரட்ட விம்பிள்டன் நிர்வாகம் கண்டுபிடித்த இயற்கையான தீர்வு தான் இந்த ரூபஸ் பருந்து.

மிரட்டலான பறவை!

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்த ரூபஸ் பருந்து விம்பிள்டன் மைதானத்தின் அதிகாரப்பூர்வ காவலாளியாகச் செயல்பட்டு வருகிறது. சுமார் 42 ஏக்கர் பரப்பளவு கொண்ட விம்பிள்டன் வளாகத்தை முழுமையாகப் பாதுகாப்பது தான் இதன் வேலை.

தினமும் அதிகாலையில், அதாவது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே, ரூபஸ் தனது பயிற்சியாளருடன் களமிறங்கிவிடும்.

பயிற்சியாளர் ரூபஸை வானில் பறக்கவிடுவார். வளாகம் முழுவதும் அது வட்டமடித்துப் பறக்கும். இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ரூபஸ் எந்தப் புறாவையும் வேட்டையாடிக் கொல்வதில்லை.

மாறாக, தங்களின் எதிரியான பருந்து ஒன்று வானில் வட்டமடிப்பதைப் பார்த்த உடனே, பயந்துபோகும் புறாக்கள் அந்தப் பகுதி பக்கமே வராமல் வேறு இடங்களுக்குத் தப்பி ஓடிவிடுகின்றன. இந்த இயற்கையான தொழில்நுட்பம் விம்பிள்டன் நிர்வாகத்திற்குப் பெரும் வெற்றியைத் தந்துள்ளது.

விம்பிள்டன் வரலாற்றில் இந்த ரூபஸ் பருந்து எவ்வளவு பிரபலம் என்றால், கடந்த 2012ம் ஆண்டு தொடருக்கு முன்பாக ரூபஸ் அடைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து அது மர்ம நபர்களால் திருடப்பட்டது. இந்தச் செய்தி லண்டன் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விம்பிள்டன் நிர்வாகமும், காவல்துறையும் தீவிரமாகத் தேடியதைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே ஒரு பூங்காவில் இருந்து ரூபஸ் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் தனது பணியைத் தொடர்ந்தது.

தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும், இயற்கையான முறையில் மைதானத்தைப் பாதுகாக்க ஒரு பருந்தை விம்பிள்டன் நிர்வாகம் பயன்படுத்தி வருவது உலக விளையாட்டு ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *