வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான Hon May Rut Ngoai தீவிலிருந்து புறப்பட்ட அந்தப் படகு, “அன் தோய்’ சர்வதேச துறைமுகத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. துறைமுகத்திற்குச் சற்று தொலைவில், சுமார் 400 மீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அந்தப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 ஊழியர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பிற படகுகளும், வியட்நாம் எல்லைப் பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகில் சிக்கியிருந்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகப் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் படகின் உள்பகுதியில் மாட்டிக்கொண்டதால், அவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.